தி பேமிலி மேன் - 2 வெப் சீரிஸ் குறித்து இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணைய தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மௌனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
தமிழீழப் போராளிகளின் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால் தமிழ் இன விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.
அழகும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் இத்தொடர் உருவாகியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு. பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட வேண்டும்.
இத்தொடரில் தமிழ், முஸ்லிம், வங்காளி என குறிப்பிட்ட இன மக்களுக்கு எதிரான மனநிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள். தி பேமிலி மேன் - 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் இப்படி படம் வெளிவந்தால் குறிப்பிட்ட நிறுவனத்தின் வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக் காட்டவிரும்புவதாகவும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.