அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற வசனத்திற்கு தி கிரேட் காளி வசனம் பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் புஷ்பா. ஆந்திர வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக் கடத்தலை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் 17ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது.
புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற 'உம் சொல்றியா மாமா', 'ஹே சாமி', 'ஸ்ரீவள்ளி' என அனைத்துப் பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. சோஷியல் மீடியாவைத் திறந்தாலே இப்படத்தின் பாடல்களுக்கு ரீல்ஸ்கள் குவிந்து காணப்படுகின்றன. புஷ்பா பட பீவர் ரசிகர்களை மட்டும் அல்லாமல் கிரிக்கெட் பிரபலங்களையும் பாடாய் படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவருடைய மகள்களும் புஷ்பா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கியது. இவரைத் தொடர்ந்து இந்திய வீரர்களான சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா இருவரும் நடிகர் அல்லு அர்ஜுன் கெட்டப்பில் வந்து பேசிய வீடியோக்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது பாட்டியுடன் சேர்ந்து ஸ்ரீவள்ளி பாட்டுக்கு நடனமாடி அசத்தினார். இதுமட்டுமல்லாது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர் டுவைன் பிராவோ புஷ்பா பாடலுக்கு நடனமாடும் வீடியோவை வெளியிட்டார்.
இந்த வரிசையில், தற்போது WWE மல்யுத்த வீரர் தி கிரேட் காளியும் சேர்ந்துள்ளார். WWE மல்யுத்த வளையத்தில் இந்தியாவின் பெயரை கொண்டு சேர்ந்த தி கிரேட் காளி, இந்திய ரசிகர்களை மகிழ்சியில் ஆழ்த்தினார். இன்று உலகம் முழுவதும் அறிந்த ஒரு நபராக இருக்கும் அவர், காளி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். புதிய வீடியோக்கள் முதல் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் 'பேசும் யாருக்கும் அடங்காதவன்டா' என்ற வசனத்திற்கு தனது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.