'நடராஜன் தான் என் ஹீரோ!!!'... 'தமிழக வீரருக்கு'... 'ஜாம்பவான் வாயிலிருந்து இப்படி ஒரு பாராட்டா?!!'... 'அப்போ இனிமே சரவெடிதான்?!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் சமீபத்தில் இடம் பெற்ற தமிழக வீரர் நடராஜனை ஜாம்பவான் கபில் தேவ் புகழ்ந்து தள்ளியுள்ளார். 

சேலத்தை சேர்ந்த தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் 2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். யார்க்கர் பந்துகளை வீசுவதில் சிறந்து விளங்கும் அவர் அதை வைத்தே எதிரணி பேட்ஸ்மேன்களை அதிர வைத்துள்ளார். ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாததையடுத்து அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளராக நடராஜன் மாறியுள்ளார்.

குறிப்பாக பெங்களூர் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்டை நடராஜன் தன் துல்லிய யார்க்கர் மூலம் வீழ்த்தி அசத்த, அதுதான் இந்த சீசனின் சிறந்த விக்கெட் என பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு டெல்லி அணிக்கு எதிரான அடுத்த பிளே-ஆஃப் போட்டியிலும் கடைசி ஓவரில் ரன் கொடுக்கக் கூடாது என்ற நிலையில், நடராஜன் ஆறு யார்க்கர் பந்துகளை வீசி மிரள வைத்தார்.

இந்நிலையில் தற்போது நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் வேகப் பந்துவீச்சாளர்கள் செயல்பாடு பற்றி பேசியுள்ள கபில் தேவ் தற்போதைய வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்யத் தெரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டி அவர்களை சாடியுள்ளதோடு யார்க்கர்களை வீசித் தள்ளிய நடராஜனை பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள கபில் தேவ், "தற்போது உள்ள வேகப் பந்துவீச்சாளர்களை கண்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. முதல் பந்தை கிராஸ் ஸீமில் வீசக் கூடாது. ஸ்விங் பந்து வீசத் தெரியாமல் வேகமாக பந்து வீசுவதிலும், மற்ற டெக்னிக்குகளை கற்றுக் கொள்வதிலும் எந்தப் பயனும் இல்லை. இந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் தான் என் ஹீரோ. இளம் வீரரான அவர் பயமின்றி பந்து வீசினார். நிறைய யார்க்கர் பந்துகளை வீசினார். அதனால் தான் நான் சொல்கிறேன், இன்று, நாளை மட்டுமல்ல, இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் யார்க்கர் தான் சிறந்த பந்து" எனத் தெரிவித்துள்ளார்.

கபில் தேவ் போன்ற ஒரு ஜாம்பவான் தமிழக வீரர் நடராஜனை தன் ஹீரோ என கூறியுள்ளது மிகப் பெரும் பாராட்டாக கருதப்படுகிறது. தற்போது இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ள நடராஜன் ஒரு சர்வதேச போட்டியில் சிறப்பாக பந்து வீசினாலும் அணியில் நீண்ட காலம் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்ற நிலையில், இது சற்றும் எதிர்பாராத பாராட்டாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்