'போட்டிகளுக்கு இடையே 'CSK' வீரர்கள் டிரான்ஸ்பரா???'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...!!!'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி எந்த வீரரையாவது டிரான்ஸ்பர் மூலம் எடுக்க போகிறதா என்பது குறித்து அதன் சிஇஓ விளக்கமளித்துள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அணிகள் தங்களுடைய தவறுகளை சரி செய்வதற்காக டிரான்ஸ்பர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு அணியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரரை மற்ற அணி நிர்வாகம் காசு கொடுத்து தங்கள் அணியில் எடுக்க முடியும். தங்கள் அணியில் இருக்கும் வீரரை வெளியே அனுப்பவும் முடியும்.  எல்லா அணிகளும் 7 போட்டிகளில் விளையாடிய பின் இந்த டிரான்ஸ்பர் பணிகள் நடக்கும் நிலையில், ஒரு அணியில் இருக்கும் வீரர் அந்த அணியில் 2 அல்லது அதற்கும் குறைவான போட்டிகளில் விளையாடி இருந்தால் மட்டுமே அவரை டிரான்ஸ்பர் செய்ய முடியும்.

இதையடுத்து டிரான்ஸ்பர் வாய்ப்பு வழங்கப்பட்டு 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை டிரான்ஸ்பர் செய்யவோ, வேறு அணியில் இருக்கும் வீரர்களை வாங்கவோ எந்த அணியும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இனி வரும் நாட்களில் அணிகள் டிரான்ஸ்பர் குறித்த முடிவை எடுக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. முன்னதாக கூட டெல்லி அணிக்கு இம்ரான் தஹிரும், சென்னை அணிக்கு அஜிங்கிய ரஹானேவும் இடம் மாற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட சூழலில் தற்போது மொத்தமாக டிரான்ஸ்பர் முறையில் கலந்து கொள்ளாமல் இருப்பதென சிஎஸ்கே அதிரடியாக முடிவு செய்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், "சிஎஸ்கே ஒருபோதும் இடைக்கால பரிமாற்றத்தில் வீரர்களை புதிதாக கொண்டுவந்ததோ அல்லது விடுவித்ததோ இல்லை. நாங்கள் இந்த மாற்றம் குறித்த விதிமுறைகளைக் கூட சரியாகப் பார்க்கவில்லை. நாங்கள் எந்த வீரரையும் அணியில் எடுக்க வேண்டுமென நினைத்துப் பார்க்கவில்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக எந்தவொரு அணியும் அதன் வீரர்களை வேறு உரிமையாளர்களுக்கு கொடுக்க விரும்புவார்கள் என நான் நினைக்கவில்லை.

தற்போது சிலர் விளையாடிக் கொண்டிருக்கலாம், மற்றவர்கள் அவ்வாறு செய்யாமல் போகலாம். ஆனால் அனைத்து வீரர்களும் ஏலத்தில் பல திட்டங்களை மனதில் கொண்டு தேர்வு செய்யப்படுகிறார்கள். நீங்கள் எப்போதும்  பிளான் A உடன் மட்டும் செல்ல முடியாது. உங்களிடம் பிளான் B, C மற்றும் D இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். அதேபோல முன்னதாக மும்பை அணியில் இருந்து கிறிஸ் லைன் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அந்த அணியும் வீரர்கள் யாரையும் நீக்க வேண்டாம், புதிதாகவும் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்