'சுஷாந்த் இறந்தது தெரியும் முன்னரே'... 'ரியாவிற்கு ஆறுதல் கூறிய பிரபலம்?'... 'முக்கிய ஆதாரமென வைரலாகியுள்ள சர்ச்சை பதிவு!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சுஷாந்த் உயிரிழந்த அன்று இயக்குநர் மகேஷ் பட்டுக்கு நெருக்கமானவரான சுஹ்ரிதா தாஸ் என்பவர் பகிர்ந்த ஃபேஸ்புக் பதிவு வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அந்தப் பதிவில் சுஹ்ரிதா தாஸ், "அன்பார்ந்த ரியா, இந்த உலகம் சுஷாந்துக்காக வருத்தமும், அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவிக்கும்போது நான் உன்னுடன் உறுதியாக நிற்கிறேன். அவரை ஒழுங்காக, நிலையாகக் கொண்டு செல்ல நீ எடுத்த எண்ணற்ற முயற்சிகளை அமைதியான பார்வையாளனாகப் பார்த்ததால், ஒரு அம்மாவாக, இந்த நாட்டின் பிரஜையாக ஒரு விஷயத்தை அனைவருக்கும் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமை எனக்கு உள்ளது.

மன அழுத்தம் என்பது பேரழிவைத் தரும் ஒரு பிரச்சினை. அதற்கு இதுவரை மருத்துவத்தில் தீர்வோ, பதிலோ கிடையாது. நீ ஒவ்வொரு முறையும் மகேஷ் பட்டிடம் ஆலோசனை கேட்க அலுவலகத்துக்கு ஓடி வரும் போதும், ஃபோனில் அவரோடு பேசும்போதும் நான் உன் பயணத்தை, உன் போராட்டத்தைப் பார்த்திருக்கிறேன். சுஷாந்த் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு நாள் மாலை சந்தித்ததை மறக்க முடியாது. உலகில் எல்லாம் சகஜமானது போல் தோன்றினாலும் ஆழ்மனதில் சுஷாந்த் நம்மை விட்டு விலகிக் கொண்டிருந்தார்.

மகேஷ் பட் அவர்கள் அதைப் பார்த்தார். அதனால் தான் பர்வீன் பாபி பற்றி அவருடைய ஆசான் யுஜி அவர்கள் சொன்ன, 'விலகிச் சென்று விடு. இல்லையென்றால் அது தன்னோடு உன்னையும் இழுத்துக் கொண்டுவிடும்' என்ற அதே வார்த்தைகளை உன்னிடம் சொன்னார்.  நீ எல்லாவற்றையும் கொடுத்தாய். அதைத் தாண்டியும் உன்னால் ஆனதை விட அதிகமாகச் செய்திருக்கிறாய். லவ் யூ. வலிமையாக இரு" எனக் கூறியுள்ளார்.

சுஷாந்தின் காதலி ரியாவிற்காக எழுதப்பட்ட இந்தப் பதிவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைவிட அது எப்போது பதிவிடப்பட்டுள்ளது என்பது தான் தற்போது இது வைரலாகக் காரணமாகியுள்ளது. இந்தப் பதிவு ஜூன் 14 காலை 11.08 மணிக்கு, சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் தெரிவதற்கு முன்பே பதிவிடப்பட்டுள்ளது. தற்போது சுஹ்ரிதா தனது ஃபேஸ்புக் பக்கத்தை லாக் செய்து, இந்தப் பதிவையும் நீக்கியுள்ளார்.

ஆனால் அந்தப் பதிவின் ஸ்க்ரீன்ஷாட் தற்போது வைரலாகி வரும் நிலையில், சுஷாந்தின் அறைக்கதவு திறக்கப்படும் முன்பே எப்படி ஃபேஸ்புக்கில் இதைப் பகிர்ந்திருக்க முடியும் என்பதே இப்போது பலருடைய கேள்வியாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று சுஹ்ரிதா தாஸ் பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்திருந்த பாஜக எம்பி சுப்பிரமணியம் சுவாமி, "மகேஷ் பட்டுக்கு நெருக்கமானவரான இந்த பெண் காலை 11 மணிக்கு இந்தப் பதிவை எப்படி எழுதியிருக்க முடியும். அப்போதுதான் வீட்டின் சாவிக்காக ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்தனர். இது மிக முக்கியமான ஆதாரம் ஜாக்கிரதை மக்களே. இதைப் படித்து வைரலாக்குங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்