உலகை உலுக்கிய ‘ஒற்றை’ புகைப்படம்..! எதுக்கும் இப்டியொரு ‘கொடுமை’ நடக்கக் கூடாது.. உருகும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனிமையின் சோகத்தால் சுவற்றில் தலையை முட்டி நிற்கும் இந்த யானையின் புகைப்படம் உலகையே உலுக்கியது.

யானைகளே இல்லாத பாகிஸ்தான் நாடு கடந்த 1985ம் ஆண்டு 1 வயதான காவன் என்ற யானைக்குட்டியை இலங்கையிடமிருந்து வாங்கியது. இஸ்லாமாபாத் மிருகக்காட்சிசாலையில் செல்லப்பிள்ளை போல சிறப்பாகவே கவனிக்கப்பட்டது. காவன் யானை வளர்ந்ததும் அதற்கு துணையாக மீண்டும் இலங்கையில் இருந்து 1990ம் ஆண்டு சஹோலி என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டது. இந்த இரு யானைகளும் மிருகக்காட்சிசாலையில் ஒன்றாக வளர்ந்து வந்தன.

எல்லாம் சிறப்பாகவே கிடைத்தாலும், பாகிஸ்தான் நாட்டின் வெப்பம் யானைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் ஒரு நாள் சஹோலி பெண் யானை திடீரென உயிரிழந்தது. நீண்ட நாள்களாக ஜோடியாக சுற்றித்திரிந்த சஹோலியின் இறப்பை காவன் யானையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் கொட்டகையை விட்டு வெளியே வராத காவன், சுவரில் தனது தலையை முட்டிக்கொண்டு எப்போது சோகமாக நின்றது. மேலும் தனிமையால் காவன் யானை மூர்க்கத்தனமாக மாறியது.

அதிக வெப்பம், தனிமை என காவன் யானையை வாட்டி எடுத்ததால், அவ்வப்போது மதம் பிடித்ததுபோல செயல்பட்டது. உணவுகளை சரியாக சாப்பிடாமல் சோகமாக சுவற்றில் முட்டிக்கொண்டே இருந்த காவன் யானையின் தனிமை, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் காவன் யானைக்கு ஆதரவாக விலங்கியல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலரும் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். யானையை அதன் சூழலுக்கு ஏற்ற ஒரு சரணாலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

குறைந்தபட்சம் அதற்கு ஒரு துணை யானையையாவது கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். ஆனால் இதை எதையுமே சரணாலய அதிகாரிகள் செவி கொடுத்து கேட்காததால், இந்த பிரச்சனை நீதிமன்றம் சென்றது. காவன் யானையின் நிலையை உணர்ந்த நீதிபதிகள் யானையை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனை அடுத்து காவன் யானை கம்போடியாவில் உள்ள சரணாலயத்துக்கு செல்லப்பட உள்ளது. தற்போது 35 வயதான காவனை ஆடல் பாடலுடன் பிரியாவிடை கொடுக்க விலங்கியல் ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் ‘நாங்கள் உன்னை மிஸ் செய்வோம்’ என்ற வாசகத்துடன் தினமும் மகிழ்ச்சியான பிரிவு உபச்சார விழா நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் விமானத்தின் பிரத்யேக கூண்டு மூலம் பறக்க உள்ள காவனுக்கு சிறப்பு பயிற்சிகளும், மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன. வரும் 29ம் தேதி விமானம் மூலம் கம்போடியா சென்று புதுவாழ்வை காவன் தொடங்க உள்ளது. வாழ்க்கையின் பாதி நாள்களை தனிமையிலேயே கழித்த காவன் யானை, இனியாவது மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என பலரும் உருக்கமாக தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்