'ஒரு நிமிஷம் பாகிஸ்தானே கதி கலங்கி போச்சே'... 'ஐநா சபையே அசந்து பார்த்த பேச்சு'... நெட்டிசன்கள் கொண்டாடும் இந்த சினேகா துபே யார்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்குச் சினேகா துபே கொடுத்த பதிலடி தான் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த சினேகா துபே என்பது குறித்து இந்த செய்திக் குறிப்பில் விரிவாகப் பார்ப்போம்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், "எங்கள் நாடு இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புகிறது. அதேநேரம், காஷ்மீர் விவகாரத்திற்குத் தீர்வு காண்பது மூலமே தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை நிலவச்செய்ய முடியும்" என வழக்கமாக இந்தியாவைக் குறை சொல்வது போலப் பேசினார்.

காஷ்மீர் விவகாரம், சிறப்புப் பிரிவு நீக்கம் தொடர்பாகவும் தனது ஆத்திரத்தை இந்தியா மீது அனலாகக் கக்கினார். ஐநா கூட்டத்தில் அவர் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இம்ரான் பேச்சு முன்பதிவு செய்யப்பட்டு வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இம்ரானின் பேச்சுக்குப் பதிலளிக்க ஐ.நா. சபையில் ரைட் ஆஃப் ரிப்ளை (Right of reply) எனப்படும் பதிலளிக்கும் உரிமையை இந்தியா கையிலெடுத்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்தியா, பாகிஸ்தானை வேற லெவல் சம்பவம் செய்து விட்டது என்றே சொல்லலாம். இம்ரான்கானுக்கு பதிலளித்த இந்திய முதன்மைச் செயலர் சினேகா துபே, "ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்து விட்டு, அத்தீயை அணைக்க முற்படுவது போலப் பாகிஸ்தானின் செயல் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஐ.நா போன்ற உலக சபைகளைத் தவறாகப் பயன்படுத்தி, பொய் மற்றும் திரிக்கப்பட்ட வதந்திகளைப் பாகிஸ்தானோ, பாகிஸ்தான் தலைவர்களோ பரப்புவது இது முதல்முறை கிடையாது.

பாகிஸ்தானில் தீவிரவாதிகள், சாமானியர்கள் போல் சாதாரணமாக வாழ்வதை உலக நாடுகளின் பார்வைகளிலிருந்து திசை திருப்பும் முயற்சியாக இதுபோன்ற செயல்களைப் பாகிஸ்தான் தலைவர் செய்கிறார் என்பதை இங்கே வருத்தத்துடன் பதிவுசெய்து கொள்கிறேன். காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான்.

உலகையே அதிரவைத்த அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் தந்தது பாகிஸ்தான்தான். அதை எந்த ஒரு நாடும் எப்போதும் மறக்காது. தீவிரவாதிகளை உருவாக்குவது அவர்களுக்கு உதவி செய்வது மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயல்களை வரலாறாகக் கொண்ட நாடாகப் பாகிஸ்தான் உள்ளது அனைவருக்கும் தெரியும்.

இதே ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இருக்கும் நாடு என்ற சாதனையையும் பாகிஸ்தானே பெற்றுள்ளது" எனத் தனது பேச்சால் ஒட்டுமொத்த அரங்கத்தையே அதிரவைத்தார் சினேகா. இவரது பேச்சு இணையத்தில் வைரலான நிலையில் யார் இந்த சினேகா துபே என நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

கோவாவில் வளர்ந்த சினேகா துபேக்கு சிறு வயது முதலே சர்வதேச பிரச்சனைகளில் ஆர்வம் அதிகம். கோவாவில் பள்ளிப் படிப்பை முடித்த சினேகா புனேயில் உள்ள பெர்குசன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். பின்னர் டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். இதையடுத்து குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற சினேகா துபே, ஐஎஃப்எஸ் அதிகாரியாகத் தனது முதல் பணியாக வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் அதிகாரியாக இணைந்தார்.

2014-ல் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் பணிபுரிந்து வந்த சினேகா,  தற்போது இந்தியாவின் முதன்மைச் செயலாளராக ஐ.நா.-வில் பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் ‘Right of Reply’ எனப்படும் `பதிலளிக்கும் உரிமை' மூலம் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு செல்ல, தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குத் தனது பேச்சால் வறுத்தெடுத்துள்ளார். சினேகா துபேவின் தைரியமான பேச்சுக்கு தற்போது நெட்டிசன்கள் பலரும் விசிறி ஆகியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்