‘அண்ணனைக் கொலை செய்தவரை மன்னித்து’.. ‘அடுத்து செய்த காரியம்’.. ‘அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது சகோதரனைக் கொலை செய்தவரை இளைஞர் ஒருவர் மன்னித்து நீதிமன்றத்தில் ஆரத்தழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் டல்லாஸில் வசித்து வந்த முன்னாள் பெண் காவலரான ஆம்பெர் கைகர் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி தனது வீட்டின் அருகே வசித்து வந்த போதம் ஜீன் என்ற இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். கருப்பினத்தவரான ஜீன் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. ஆனால் கருப்பினத்தவர் என்பதால் தாக்கவில்லை என அதை முற்றிலுமாக மறுத்த ஆம்பெர் சம்பவத்தன்று ஜீன் தனது வீட்டுக்குள் கொள்ளையில் ஈடுபட முயன்றதாகத் தவறாக நினைத்து சுட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

ஆம்பெருக்கு குறைந்தது 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டல்லாஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டாம்மி கெம்ப், ஆம்பெருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரின் சிறை தண்டனை குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் நீதிமன்றத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ஜீன் குடும்பத்தினர் சார்பில் நீதிமன்றத்திற்கு வந்த அவருடைய தம்பி பிராண்ட் ஜீன் ஆம்பெரிடம், “ஒரு மனிதராக நான் உங்களை நேசிக்கிறேன். உங்களுக்கு எந்தக் கெடுதலும் நேர வேண்டும் என நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். தனது அண்ணனைக் கொலை செய்தவரை மன்னித்துவிட்டதாகக் கூறிய அவர் நீதிபதியிடம், “இது சாத்தியமா எனத் தெரியவில்லை. நான் அவரை அரவணைக்கலாமா?” என அனுமதி கேட்டுள்ளார். நீதிபதி அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பிராண்ட் ஆம்பரை ஆரத்தழுவி ஆறுதல் கூற ஆம்பர் மனமுடைந்து அழுதுள்ளார்.

US, BROTHER, MURDER, FORGIVES, HUG, COURT, VIRAL, VIDEO, SHOOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்