அடேங்கப்பா..! ஆப்கான் போருக்காக அமெரிக்கா செஞ்ச செலவு எவ்வளவு தெரியுமா..? தலை சுத்த வைக்கும் தொகை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான்களுக்கு எதிரான போரில் ஆப்கானிஸ்தானுக்கு உதவுவதற்காக மலைக்க வைக்கும் தொகையை அமெரிக்கா செலவிட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தொடங்கி 20 வருடங்களாக நடந்து வந்த ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன். வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

தாலிபான்களை அழிக்க அமெரிக்க அரசு, பெரும் படையை ஆப்கானிஸ்தான் நோக்கி அனுப்பியது. ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் ஒருகட்டத்தில் 1,10,000 பேர் என்ற அளவுக்கு அதிகரித்தது. இதற்காக ஏராளமான பணத்தை அமெரிக்கா செலவிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ‘Costs of War Project’ என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்க அரசு செலவழித்த தொகை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை 20 ஆண்டுகளாக 2.26 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்கா செலவு செய்துள்ளது.

இந்த தொகையானது ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்காவின் 30 பணக்கார கோடீஸ்வரர்களின் நிகர மதிப்புகளை விட அதிகம். தினசரி ரீதியாக கணக்கிட்டால் 20 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் 300 மில்லியன் டாலர்கள் என்ற அளவில் ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்கா செலவிட்டுள்ளது. ஒட்டுமொத்த தொகையில் தாலிபான்கள் உடனான நேரடி யுத்தத்துக்குதான் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை மட்டும் 800 பில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கும்.

ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்க அரசு கடன் வாங்கித்தான் இந்த தொகைகளை கொடுத்திருக்கிறது. இந்தக் கடனுக்கான வட்டியாக மட்டும் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க அரசு செலுத்தியுள்ளது. இந்த வட்டி தொகையையும் சேர்த்தே மொத்தம் 2.26 ட்ரில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாக பிரவுன் பல்கலைக்கழக குழு மதிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் போருக்காக வாங்கிய கடனுக்கான வட்டி மட்டும் 2050-ம் ஆண்டு வாக்கில் 6.5 டிரில்லியன் டாலரை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானை சீரமைப்பு செய்வதற்காக அமெரிக்கா 144 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. நிர்வாகத்தை மேம்படுத்துதல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கு உதவுதல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுவதற்கான வேலைத்திட்டங்கள், மனிதாபிமான உதவி திட்டங்கள் போன்றவை இந்த சீரமைப்பில் இருந்தன.

2002-ம் ஆண்டு மே மாதம் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கும், ராணுவத்தை ஆயுதப்படுத்துவதற்கும் 88.3 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. அதேநேரம், இந்த தொகையில் 19 பில்லியன் டாலர் மோசடி செய்ததன் மூலம் வீணடிக்கப்பட்டதாக அமெரிக்க காங்கிரஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதையும் பிரவுன் பல்கலைக்கழக குழு சுட்டிக்காட்டி இருக்கிறது.

பெரும்பாலும் ராணுவ கட்டமைப்புக்கே அதிகப்படியான முதலீடுகளை அமெரிக்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தாலிபான்களை ஒடுக்குவதற்கான ஆபரேஷன்கள், ராணுவ வீரர்களின் உணவு, உடை, மருத்துவ வசதிகள், ஊதியம், சலுகை போன்றவற்றிற்காக அதிகமாக செலவளித்துள்ளது.

இந்த மதிப்பீடுகள் போரில் இறந்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு செலவிட்டதை கணக்கிடாமல் செய்யப்பட்டுள்ளது. போரில் இழந்த உயிர்களையும், மதிப்புகளையும் சேர்க்கும் பட்சத்தில் செலவுகள் இன்னும் அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மட்டும் 2,500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த முடிவில் இருந்து தான் பின்வாங்கப்போவதில்லை என சமீபத்தில் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

News Credits: Forbes

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்