கொரோனா 'ஆர்என்ஏ-வை' அழிக்கும்... 'செயற்கை' ஆர்என்ஏ... லண்டன் 'இம்பீரியல்' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...' 'கொரோனா' ஒழிப்பில் 'புரட்சியை' ஏற்படுத்தும் என 'நம்பிக்கை...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் புதிய அணுகுமுறையில் உருவான கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டதில் நல்ல பலன்  கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும், கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை மூலம் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடியது என்பதைக் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த தடுப்பூசியை கேத்தி என்ற 39 வயது பெண். தாமாக முன்வந்து போட்டுக் கொண்டுள்ளார். இந்த சோதனையில் நல்ல முன்னேற்றம் கிடைத்திருப்பதையடுத்து, இந்த தடுப்பூசியை அடுத்த கடடமாக அக்டோபர் மாதம் 6 ஆயிரம் பேருக்கு செலுத்தி சோதித்துப்பார்ப்பார்க்க உள்ளனர்.

இந்த பிரமாண்ட சோதனை முயற்சி வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த தடுப்பூசி இங்கிலாந்து நாட்டிலும் சரி, பிற நாடுகளிலும் சரி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கத்தொடங்கி விடும் என்று இம்பீரியல் விஞ்ஞானிகள் குழுவினர் கூறி உள்ளனர்.

மற்ற தடுப்பூசிகளுக்கும் இந்த தடுப்பூசிகளுக்கும் ஒரு சிறப்புத்தன்மை இருக்கிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

பொதுவாக வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள், வைரசை பலவீனப்படுத்தியோ, மாற்றி அமைத்தோ அதன் அடிப்படையில் உருவாக்கக்கூடியவையாகதான் இருக்கும். ஆனால் இந்த தடுப்பூசி ஒரு புதிய அணுகுமுறை வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்.என்ஏ. (ரைபோநியூக்ளிக் அமிலம்) என்று அழைக்கப்படுகிற வைரசின் மரபியல் குறியீட்டின் கூறுகளை இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் செயற்கையாக உருவாக்கி உள்ளனர். இது அச்சு அசலாக வைரசைப்போலவே தோற்றம் அளிக்கும். இதை சிறிதளவு உடலில் செலுத்துவார்கள். அப்படி இதை உடலில் செலுத்துகிறபோது, ஆர்.என்.ஏ. கூறானது, பல்கிப்பெருகும். வைரசின் வெளிப்புறம் உள்ள ‘ஸ்பைக் புரோட்டின்’ என்று சொல்லப்படுகிற கூர்மையான புரத அமைப்பை அது நகல் எடுத்துக்கொள்ளும்படிக்கு உடலில் உள்ள செல்களுக்கு கட்டளையிடும்.

இதன்மூலமாக கொரோனா வைரசை அடையாளம் கண்டு, அதை எதிர்த்து போராடவும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புக்கு இந்த தடுப்பு மருந்து பயிற்றுவிக்கும். அது மட்டுமின்றி இந்த தடுப்பு மருந்தினை உடலில் செலுத்துவோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடாதபடிக்கு பாதுகாப்பு அரணாகவும் இருக்கும்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம், மிக மிக நுண்ணிய அளவிலான வைரசின் ஆர்.என்.ஏ. குறியீடு மட்டுமே தடுப்பு மருந்தாக செலுத்தப்படும்.

ஒரு லிட்டர் செயற்கை ஆர்.என்.ஏ.யை கொண்டு, 20 லட்சம் பேருக்கு செலுத்தக்கூடிய தடுப்பூசி ‘டோஸ்’களை தயாரிக்க முடியும் என்று இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகளின் தடுப்பூசியை முதல் நாளில் ஒருவருக்கும், அடுத்து 48 மணி நேரத்துக்கு ஒரு முறை 3 பேருக்கும் என செலுத்துகிறார்கள். ஒரு வாரத்துக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

இந்த புதிய அணுகுமுறை எதிர்காலத்தில் தொற்று நோய் வெடிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் புரட்சியை ஏற்படுத்தும் என தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ராபின் ஷாடோக் கூறியுள்ளார். இந்த தடுப்பூசி கொரோனாவை வேரடி மண்ணாக வீழ்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நம்பலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்