சூயஸ் கால்வாயில் சிக்கிய... எவர்கிவன் கப்பலுக்கு கை கொடுத்த 'பங்குனி உத்திரம்'!.. பவுர்ணமியால் உலக வர்த்தகம் காப்பாற்றப்பட்டது எப்படி?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரு வாரமாக சூயஸ் கால்வாயில் தரை தட்டிய சரக்கு கப்பலை மீட்டதன் பின்னணியில் பவுர்ணமியின் (பங்குனி உத்திரம்) சக்தியும் இருந்தது தெரியவந்துள்ளது.

சூயஸ் கால்யாயில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பிப்பால், கடந்த ஒரு வாரமாக உலக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில், உலகம் இதுவரை சந்திக்காத பிரச்சினை இது. இந்த பிரச்சினையை தீர்த்து, மீண்டும் உலக வர்த்தகத்தை தொடங்கி இருக்கிறது இயற்கை நிகழ்வான பவுர்ணமி.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, EVERGREEN என்ற நிறுவனதுக்கு சொந்தமான EVER GIVEN என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் தரை தட்டியது.

கப்பலின் முன் பகுதி கால்வாயில் தரையில் மோதி இருந்தது. கிட்டதட்ட 400 மீட்டர் நீளமும், 2 லட்சம் டன் எடையும் கொண்ட பிரம்மாண்டமான சரக்கு கப்பல் கால்வாயை அடைத்துக் கொண்டது.

கப்பலை அண்ட்கிருந்து அகற்றினால் மட்டுமே, மற்ற கப்பல்கள் அவ்வழியாக செல்ல முடியும். இல்லையெனில், உலக வர்த்தகமே சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.

முதலில், கப்பலுக்கு அடியிலிருந்து மணலை அகற்றி, இழுவைப்படகுகள் மூலமாக கப்பலை இழுத்து மிதக்கவைக்கலாம் என நிபுணர்கள் முடிவெடுத்தனர்.

ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மணலை அகற்றும் பணி தொடங்கியது. டன் கணக்கிலான மணலை அகற்றினர். ஆனால், கப்பலுக்கு கீழே இருந்த பாறை மீட்புப்பணியில் தொய்வை ஏற்படுத்தியது.

நீர் மட்டம் உயர்ந்தால் கப்பலை எளிதாக மீட்டுவிடலாம் என்ற சூழல் உருவானது. அப்போது தான் உதவியது இயற்கை.

வழக்கமாக பவுர்ணமி நாட்களில், கடலில் அலைகள் அதிகமாக இருக்கும். எகிப்தில் நேற்று முதல் நாள் இரவு சூப்பர் மூன் எனப்படும் பவுர்ணமி தோன்றியது. இந்த மாதம் பங்குனி என்பதால், உத்திரம் நட்சத்திரத்தில் பவுர்ணமி நிலை உருவானது. அப்போது செங்கடலில் அதிக அலை ஏற்பட்டது.

இதனால், சூயஸ் கால்வாய்க்கு அலையுடன் அதிக அளவில் தண்ணீரும் வந்தது. இது மீட்புப்பணிக்கு தடையாக இருந்த பாறையை அகற்ற பெரிதும் உதவியது.

சரியாக பெரிய அலை வரும் நேரத்திற்கு மீட்புக்குழு காத்திருந்தது. பெரிய அலையுடன் அதிக தண்ணீரும் வந்து, கால்வாயில் நீர்மட்டம் உயர்ந்தது. அதனால் கப்பல் உந்தி தள்ளப்பட்டது.

உடனடியாக கப்பலை இழுத்து சரியான பாதைக்கு கொண்டு வந்தது மீட்புக்குழு. அந்த 10 நிமிடங்கள் மிகவும் திகிலாக இருந்தது என்றும், அதில் சிறு தவறு நடந்திருந்தால் கூட கப்பல் மற்றொரு இடத்தில் சிக்கி மேலும் தலைவலியை கொடுத்திருக்கும் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது, சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. எனினும், கால்வாயில் இயல்பு நிலை திரும்ப சில காலம் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்