'நீங்களே இப்படி பண்ணலாமா'?..ஒரே ஒரு 'ஃபேஸ்புக் பதிவு'...வருத்தம் தெரிவித்த போலீசார்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஈஸ்டர் தினத்தில், இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் உலகையே அதிரவைத்தது.அன்றைய தினத்தில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். விடுமுறையைக் கழிக்க இலங்கை வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் இத்தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த கோர வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 6 பேரின் புகைப்படங்களை அந்நாட்டு காவல் துறை வெளியிட்டது.அதில் அப்துல் காதர் ஃபாத்திமா கதியா என்ற பெண்ணும்,தேடப்படும் குற்றவாளியாக இலங்கை காவல்துறை அறிவித்தது.இந்நிலையில் தேடப்படும் பெண்ணின் புகைப்படம் எனக்கூறி தவறான புகைப்படத்தை இலங்கை காவல்துறை வெளியிட்டது.இது கடும் சர்ச்சையையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோரமான தாக்குதல் குறித்து விசாரித்து வரும் காவல்துறை,எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறை தவறுதலாக வெளியிட்ட  புகைப்படத்தில் இருப்பவர், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் வசிக்கும் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அமாரா மஜீத்தின் ஆகும்.தேடப்படும் குற்றவாளியின் படத்தில் தனது புகைப்படத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கண்டத்தைப் பதிவிட்டிருந்தார்.

அதில், “அனைவருக்கும் வணக்கம், ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான் தவறாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன்.இது முற்றிலும் தவறானது. இஸ்லாம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஏற்கெனவே கண்காணிப்பு சிக்கல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனக்கு இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் அவசியம் இல்லை.இந்தக் கொடூரமான தாக்குதலுடன் என்னைத் தொடர்புப்படுத்துவதை நிறுத்துங்கள்.அடுத்த முறையாவது இதுபோன்ற தகவல்களை வெளியிடும்போது கவனமாக இருங்கள்.நீங்கள் வெளியிடும் தகவல்கள், ஒரு குடும்பத்தையும் ஒரு சமூகத்தையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட இலங்கை காவல்துறை தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 'ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் அப்துல் காதர் ஃபாதிமா காதியா என்ற பெண் தேடப்படும் நபராக உள்ளார். அவரது புகைப்படம் எனக் கூறி வெளியிடப்பட்ட படம் தவறானது.இந்த செயலுக்கு இலங்கை காவல்துறை வருத்தம் தெரிவித்து கொள்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SRILANKA, SRI LANKA BLASTS, SUICIDE BOMB ATTACKS, AMARA MAJEED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்