ஒரே இரவில் 26 கேபினெட் அமைச்சர்களும் ராஜினாமா.. என்ன நடக்கிறது இலங்கையில்..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமையை சுட்டிக்காட்டி அந்நாட்டு கேபினெட் அமைச்சர்கள் 26 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது இலங்கை அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertising
>
Advertising

நெருக்கடி

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. அரிசி, பிரெட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், உணவு பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தினந்தோறும் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அவசர நிலை

இதனை அடுத்து இலங்கை தலைநகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கொழும்புவில் உள்ள அவர் வீட்டின் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 45 பேர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிகிறது. கொழும்புவின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், இலங்கையில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார்.

ராஜினாமா

இந்நிலையில், இலங்கை அரசின் 26 கேபினெட் அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர். இதுகுறித்து கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனே செய்தியாளர்களிடம் பேசுகையில்," அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் அவரது மூத்த சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக் ஷேவைத் தவிர 26 அமைச்சர்களும் பதவி விலகி உள்ளனர். அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளதால், அதிபர் புதிய அமைச்சரவையை அமைக்க முடியும். மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.

ராஜபக்ஷேவின் குடும்ப உறுப்பினர்களான நிதி அமைச்சர் பசில், விவசாயத்துறை அமைச்சர் சமல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1948 ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை, முதன்முறையாக இப்படி ஒரு மாபெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இலங்கை கேபினெட் அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது இலங்கை அரசியல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SRILANKA, ECONOMICCRISIS, PROTEST, இலங்கை, பொருளாதாரநெருக்கடி, ராஜினாமா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்