'சம்பாரிச்ச காசெல்லாம் நாசமா போச்சே'... '2 நாளில் காணாமல் போன 2 லட்சம் கோடி'... மனுஷன் சிரிச்சு சிரிச்சே சோலிய முடிச்சிட்டாரு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் இருக்கும் கோடீசுவரர்களின் புலம்பல் சத்தம் தான் உலக அளவில் உள்ள வணிகர்களின் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. அப்படி என்ன தான் நடக்கிறது, அவர்களுக்கு என்ன ஆச்சு என்பது குறித்து கொஞ்சம் அலசுவோம்.

சீன அதிபரான ஜி ஜின்பிங் சமீப காலங்களாகச் சீனாவில் கடுமையான பல விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார், ஒரு வேளை சீனாவை முழுவதுமாக ஒரு சர்வாதிகார நாடாக மாற்ற அவர் முடிவு செய்துள்ளாரா என்ற சந்தேகம் கூட பல அரசியல் விமர்சகர்களுக்கு எழுந்துள்ளது.

அந்த வகையில் ஆண்கள் பெண்கள் போல லிப் ஸ்டிக் எல்லாம் போடக் கூடாது, சீன ஆண்கள் சிலர் தென்கொரியா பிடிஎஸ் ஸ்டைல் பாப் பாடல்களுக்கு நடனமாட, இனிமேல் அதுபோன்ற நிகழ்ச்சிகளை நடந்த கூடாது என அதற்கும் தடை விதித்தார்  ஜி ஜின்பிங். மேலும் ஜி ஜின்பிங் கொண்டு வந்த குழந்தைகள் கேம் ஆடும் நேரத்தை வாரத்திற்கு மூன்று மணி நேரமாகக் குறைத்ததை மட்டும் தான் சீன மக்கள் ரசித்தார்கள் என்று சொல்லலாம்.

தற்போது பணக்காரர்கள் பலரும் ஜி ஜின்பிங் கொண்டு வந்த முக்கியமான சட்ட விதிமுறைகளைப் பார்த்துத் தான் அரண்டு போயுள்ளார்கள். அதில் முக்கியமானது தான் சமமான பொருளாதார சட்டம். இந்த சட்டத்தின்படி கோடீசுவரர்களுக்கு அதிக வரி வசூலிப்பதோடு மக்களுக்கான அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது. மேலும் பணக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பல சலூகைகளை ரத்து செய்ததுடன், பணக்காரர்களை அரசின் நலத்திட்டப் பணிகளுக்கு முதலீடு செய்ய வைப்பது என அதிரடி காட்டி வருகிறார் ஜி ஜின்பிங்.

அதாவது பணக்காரர்களிடம் இருக்கும் பணத்தை எடுத்து அரசின் திட்டங்களுக்குச் செலவிடுவது தான் ஜி ஜின்பிங்யின் மாஸ்டர் பிளான். ஆனால் ஜி ஜின்பிங்யின் நடவடிக்கையால் சீனாவின் மொத்த பங்குச் சந்தையும் புதிய சரிவைச் சந்தித்துள்ளது. சீனாவின் பெரிய நிறுவனங்கள் பல லட்சம் கோடிகளைப் பங்குச் சந்தையிலும், சந்தைக்கு வெளியிலும் இழந்து வருகிறது.

சமமான பொருளாதார சட்டத்தினால் இதுவரை 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதில் சோகம் என்னவென்றால் சீனாவைச் சேர்ந்த கோலின் ஹயான் என்ற கோடீசுவரருக்கு 2 நாளில் மட்டும் சுமார் 2 லட்சம் கோடி அளவிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோலின் ஹயானின் நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த நஷ்டத்திலிருந்து உலகின் பெரும் நிறுவனங்களில் ஒன்றான அலி பாபாவும் தப்பவில்லை.

ஹாய் கா யான் என்ற கோடீஸ்வரருக்கு சொந்தமான எவர்கிராண்டே குரூப் என்ற நிறுவனம் 1.17 லட்சம் கோடி ரூபாய் நஷ்ட கணக்கிற்குச் சென்றுள்ளது. இந்த நிறுவனங்களின் அமெரிக்கக் கிளைகளின் பங்குகளும், மற்ற நாடுகளில் உள்ள பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளது. அலிபாபா நிறுவனம் மொத்தமாக 33 சதவிகித இழப்பையும், டென்சென்ட் நிறுவனம் 20 சதவிகிதம் இழப்பையும் சந்தித்துள்ளது.

சீனாவின் சமமான பொருளாதார சட்டம் சீனாவில் இருக்கும் பெரும் பணக்காரர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது என்று சொன்னால் நிச்சயம் மறுப்பதற்கு இல்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்