‘அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல’!.. அந்த சட்டத்தின்படி தான் ஆட்சி நடக்கும்.. பரபரப்பை கிளப்பிய தாலிபான்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் இனி ஜனநாயக ஆட்சி கிடையாது என தாலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியபின், பெரும்பாலான மாகாணங்களை தாலிபான் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷர்ப் கனி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பி ஓடிவிட்டார்.

காபூலில் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தாலிபான்கள் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். கடந்த காலத்தில் தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தாலிபான் அமைப்பின் நிர்வாகிகளுள் ஒருவரான வஹீதுல்லாஹ் ஹஷிமி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ரீதியான ஆட்சிக்கு இடமில்லை. என்னவிதமான அரசியல் முறையை ஆப்கானிஸ்தானில் செயல்படுத்தலாம் என்றெல்லாம் நாங்கள் ஆலோசிக்கமாட்டோம். ஏனென்றால் எங்களுக்கு ஷரியத் சட்டம் இருக்கிறது. அதன்படி ஆட்சி நடக்கும்.

இங்கு ஜனநாயக முறைக்கு எந்த வழியும் இல்லை. அதற்கு காரணம் ஜனநாயக முறைக்கான எந்த அடிப்படைக் கட்டமைப்பும் இங்கு இல்லை. தாலிபான் தலைவர்களுடான கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. அப்போது நாட்டை நிர்வாகம் செய்வது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.

கடந்த முறை (1996-2001-ம் ஆண்டுவரை) தலைவர் முல்லா ஓமர் தலைமையில் எவ்வாறு ஆட்சி நடந்ததோ அதேபோல்தான் இந்த முறையும் ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. மூத்த தலைவரான ஹெய்பத்துல்லா அகுன்ஜதா நிர்வாகக் குழுவின் தலைவராக இருப்பார்.

எங்களிடம் விமானம், ஹெலிகாப்டர் இருக்கிறது. ஆனால் இதை இயக்க விமானிகள் இல்லை. அதனால் ஆப்கான் படையிலிருந்து வீரர்களையும், முன்னாள் விமானிகளையும் எங்கள் அமைப்பில் சேர்க்க இருக்கிறோம். பெரும்பாலும் ஆப்கான் அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த உள்ளோம்’ என வஹீதுல்லாஹ் ஹஷிமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின், பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அதேபோல் சுவர்களில் வரையப்பட்டுள்ள பெண்களின் விளம்பர படங்களை அழிக்கும் நடவடிக்கையை தாலிபான்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்