3 கொலையா? அதெல்லாம் இல்ல.. மொத்தம் 93.. போலீசை அதிரடித்த.. சீரியல் கில்லர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 3 பெண்களைக் கொலை செய்ததற்காக சாமுவேல் லிட்டில் (79) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் 50 ஆண்டுகளில் இதுவரை 93 கொலைகளை தாம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் ஒரு சீரியல் கில்லர் இவ்வளவு கொலைகளை செய்வது இதுவே முதல்முறை என அமெரிக்காவின் விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 700 மணி நேரங்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதலில் வாய்திறக்க மறுத்த சாமுவேல் தொடர்ந்து தனது குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஓவியத்தில் ஈடுபாடு கொண்ட சாமுவேல் கொலை செய்த பெண்கள், கொலை நடந்த இடங்கள் ஆகியவற்றையும் வரைந்து காட்டியிருக்கிறார். அவர் வரைந்து காட்டிய இடங்கள் தத்ரூபமாக இருந்ததாகவும், அவரது நினைவுத்திறன் அபாரமானது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சீரியல் கில்லர் இவர்தான் என்று அறிவித்திருக்கிறது, எஃப்.பி.ஐ. அவரால் கொல்லப்பட்ட 50 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றில் பல, விபத்துகளாகவும் பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத வழக்குகளாகவும் இருந்ததாக எஃப்.பி.ஐ கூறுகிறது. கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண பொதுமக்களும் உதவ வேண்டும் என்று அறிவித்து, அதற்கென சாமுவேல் வரைந்த படங்கள் மற்றும் அவர்களைப் பற்றி வீடியோக்களுடன் பிரத்யேக இணையதளத்தையே எஃப்.பி.ஐ வடிவமைத்திருக்கிறது. கொலை செய்தது குறித்து பேசும் சாமுவேல், அவை தனக்கு மனநிறைவைத் தந்ததாகவும், பலருக்கு அதன்மூலம் விடுதலை கொடுத்ததாகவும் கூறி அதிரவைத்திருக்கிறார்.

இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

MURDER, AMERICA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்