மகாத்மா காந்தியின் ‘கொள்ளுப்பேத்தி’-க்கு 7 ஆண்டு சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தியின் இரண்டாவது மகனான மணிலால் காந்தியின் மகள் இலா காந்தி. மனித உரிமை ஆர்வலரான இவர், பல்வேறு சமூக செயல்களுக்கான அமைதி விருதை பெற்றுள்ளார். மேலும் 1994 முதல் 2004 வரை தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இலா காந்தியின் கணவர் ராம்கோபின். இவர் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் மேம்பாட்டு நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இந்த தம்பதியினரின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின் (வயது 56). இவர் சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் ஆஷிஷ் லதா ராம்கோபின் மீது மகராஜ் என்ற தொழிலதிபர் பண மோசடி புகார் அளித்தார். அந்த புகாரில், சணல் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்டர் கிடைத்திருப்பதாகவும், அந்த ஆர்டருக்கான இறக்குமதி வரியை செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்றும் ஆஷிஷ் லதா கூறினார். அதற்காக இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி கடனாக வேண்டும் என்றும், வரும் லாபத்தை பகிர்ந்து கொள்வதாகவும் கூறி தன்னிடம் பணம் கேட்டதாகவும் தொழிலதிபர் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

அந்த சணல் ஒப்பந்தம் குறித்த ஆர்டர் நகலையும் அவரிடம் ஆஷிஷ் லதா காட்டியுள்ளார். இன்வாய்ஸ், மற்றும் சில ஆவணங்களை போலியாக உருவாக்கி மகாராஜிடம் ஆஷிஷ் லதா காண்பித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை நம்பிய தொழிலதிபர் மகாராஜ் ஆஷிஷ் லதாவுக்கு பணம் வழங்கியுள்ளார். ஆனால் ஆஷிஷ் லதா காண்பித்த ஆவணங்கள் போலியானவை என்று தெரியவந்ததை அடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு டர்பன் நீதிமன்றத்தில் மகாராஜ் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது ஆஷிஷ் லதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இந்தியாவில் இருந்து மூன்று கைத்தறி கன்டெய்னர்களை இறக்குமதி செய்வதாக பொய்யான தகவல் கூறி போலி இன்வாய்ஸ் மற்றும் ஆவணங்களை ஆஷிஷ் லதா வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்