'ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?'... 'வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு'... கொண்டாட்டத்தில் அமெரிக்க மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில் அதிபரைத் தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற வேண்டும். இதையடுத்து அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதற்கான எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் 50 மாகாணங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 538 தேர்வாளர்கள் குழுவினர் வாக்களித்தனர். அரிசோனாவில் 11 பேர், ஜார்ஜியாவில் 16 பேர், நெவடாவில் 6 பேர், பென்சில்வேனியாவில் 20 பேர், விஸ்கான்சினில் 10 பேர் என தேர்வாளர்கள் குழுவினர் ஜோ பைடனுக்கு வாக்களித்தனர். அதேபோன்று அந்தந்த மாகாணங்களில் தேர்வாளர் குழுவினர், அதிபர், துணை அதிபரைத் தேர்ந்தெடுத்து வாக்களித்துக் கையெழுத்திட்டனர். தேர்வாளர் குழுவினர் வாக்களிப்பால் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்பில்லை.

மேலும் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் அமெரிக்காவில் அதிபராவதற்கு இவர்களது அங்கீகாரம் அவசியமானது. இதனிடையே கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளை ஜோ பைடன்  பெற்றார். இதன் காரணமாக  270 தேர்தல் வாக்குகளைப் பெற்று அதிபர் பதவியைக் கைப்பற்றுவதை ஜோ பைடன் மீண்டும் உறுதி செய்திருக்கிறார். பிடனுக்கு 306 வாக்குகளும், டிரம்பிற்கு 232 வாக்குகளும் கிடைத்தன.

இதற்கிடையே டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுப்பதால் ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்பதற்கு இந்த நடைமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. தேர்தலை எதிர்த்து டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பதில் சட்டரீதியான சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து தனது வெற்றி குறித்து ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்விட்டில், ''சட்டத்தின் ஆட்சி, நமது அரசியலமைப்பு மற்றும் மக்களின் விருப்பம்  வெற்றி பெற்று உள்ளது. ஜனநாயகத்தின் சுடர் இந்த தேசத்தில் வெகு காலத்திற்கு முன்பே எரியத்தொடங்கி விட்டது. ஒரு தொற்றுநோயோ அல்லது அதிகார துஷ்பிரயோகமோ அந்த சுடரை அணைக்க முடியாது'' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அரசியலில் புதிய உற்சாகம் எழுந்துள்ளது. ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது அமெரிக்க மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்