'சரி, காதல் தான் முக்கியம்ன்னு டயலாக் பேசலாம்'... 'ஆனா எப்படி வாழ போற'?... 'ஒரே இரவில் இளவரசி எடுத்த முடிவு'... ஆடிப்போன அரச குடும்பம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காதல் வந்து விட்டால், ஜாதி, மதம், இனம் என அனைத்தும் தோற்றுப் போகும். ஆனால் நிஜத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்றும் கூறுபவர்கள் உண்டு. ஆனால் நிஜத்தில் காதல் தான் முக்கியம் நிரூபித்துள்ளார் ஜப்பான் இளவரசி.

ஜப்பான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் 29 வயதான மேக்கோ (Mako). இளவரசியான இவர், ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹித்தோவின் (Naruhito) மருமகள். இவர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் தன்னுடன் படித்து வந்த கொமுரோ (Kei Komuro) என்ற இளைஞரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். அவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் இருவரும் திருமணப் பந்தத்தில் இணைய முடிவு செய்தனர். ஆனால் ஜப்பான் நாட்டு வழக்கப்படி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், அதன்பிறகு அவர் அரசு குடும்பத்தில் இருக்க முடியாது. திருமணம் செய்து கொண்ட பின்னர் அரச குடும்பத்திலிருந்து விலகி விட வேண்டும்.

இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு ஆடம்பரமாக வாழ ஒரு பெரிய தொகையை அரச குடும்பம் வழங்கும். அந்த வகையில் இளைஞர் கொமுரோவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்த இளவரசி மேக்கோ, அரச குடும்பத்தை விட்டு விலக முடிவு செய்தார். அரச குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதையடுத்து இளவரசி மேக்கோவுக்கு சுமார் 95 கோடி ரூபாய் கொடுக்க அரச குடும்பம் முடிவு செய்தது.

ஆனால் அந்த பணம் தனக்கு வேண்டாம் என இளவரசி மேக்கோ முடிவு செய்துள்ளார். இது அரச குடும்பத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரச குடும்ப சலுகை எதுவும் இல்லாமல் எப்படி வாழப் போகிறாய் என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர் தனது காதலனை விரைவாக கரம் படிக்க வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளார். அடுத்த மாதம் அவர்களுக்குத் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னதாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்ட போது சன்மானத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்தது இல்லை என்பது தான் இதில் சுவாரசியம். இளவரசி மேக்கோ எடுத்துள்ள முடிவு அரச குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அடுத்து என்ன செய்யலாம் அரச குடும்பத்தினர் ஆலோசித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்