'இந்தியா... தைவான்... ஹாங்காங்!'.. ட்ரெண்டிங்கான 'மில்க் டீ' கூட்டணி!.. ஏக கடுப்பில் சீனா!.. இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய , சீன வீரர்கள் லடாக் எல்லைக் கோடு அருகே கடுமையாக மோதிக் கொண்டனர். இந்திய தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலிருந்து கொல்லப்பட்ட வீரர்கள் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. சீன அதிபர் ஜின் பிங்கின் ஒப்புதலுக்குப் பிறகே சீன தரப்பில் ஏற்பட்ட உயிர்சேதம் பற்றிய தகவல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

இந்திய வீரர்கள் மீது சீனா நடத்திய தாக்குதல் உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. 'இரு நாடுகளும் எங்களுக்கு நெருங்கிய நட்பு நாடு. இந்த பிரச்னையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்' என்று ரஷ்யா கூறியுள்ளது. இத்தனை ஆண்டு காலம் சீனாவுக்கு எதிரி போல பேசி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விஷயத்தில் அமைதி காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தியாவுக்கு சீனாவுக்குள்ளிருந்தே ஆதரவு வெகுவாக கிடைத்துள்ளது என்பதுதான் அதிர்ச்சி தகவல்.

சீனா இந்தியாவுடன் மட்டும்தான் சண்டை போடுகிறதா இல்லை... தென்சீனக்கடலுக்கு உரிமை கொண்டாடி, வியட்நாம், மலேசியா, ஜப்பான் நாடுகளுடன் சண்டையிடுகிறது. சீனாவின் சிறப்பு அந்தஸ்த்தில் உள்ள ஹாங்காங் மக்கள், சீன அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். தைவான் நாட்டுக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. திபெத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இப்போது, இந்திய வீரர்களையும் தாக்கியுள்ளதால் சீனாவுக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு கடுமையாக வலுத்துள்ளது.

ஹாங்காங்கின் மீடியா பிளாட்ஃபார்மில் நேற்று இந்திய ஆதரவு மீம்ஸ்கள் ஏராளமாக வைரலானது. 'இந்திய ராமர் சீன டிராகனை கொல்லுவார் ' என்று ஒரு புகைப்படத்தை மீடியா பதிவிட அது வைரலானது. இந்த புகைப்படத்தை ' தைவான் டைம்ஸ்' பத்திரிகை 'போட்டோ ஆஃப் தி டே ' என்ற பகுதியில் பிரசுரித்துள்ளது. இதுவும் இந்தியா, தைவானில் டிரெண்டாகியது. 'தேங்கயூ தைவான்' என்று இந்தியர்களும் இந்த புகைப்படத்தை ஆயிரக்கணக்கான முறை ரீ ட்விட் செய்துள்ளனர். மீடியா பிளாட்பார்மில் ஆயிரக்கணக்கான ஹாங்காங்வாசிகள், இந்தியாவுக்கு ஆதரவான படங்களை பழைய  நினைவுகளை நேற்று பகிர்ந்து கொண்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஹாங்காங்குக்கு இந்திய ராணுவம்தான் அரண் என்றும் 1941-ம் ஆண்டு ஹாங்காங் போரின்போது, இந்திய ராணுவம்தான் ஜப்பானியர்களிடமிருந்து ஹாங்காங் மக்களை பாதுகாத்தது எனவும் பலர் நினைவு கூர்ந்துள்ளனர். சீனாவில் பிளாக் டீதான் அனைவரும் விரும்பிக் அருந்துவார்கள். ஆனால், இந்தியா, தைவான் ஹாங்காங்கில் பால் கலந்த காபி அல்லது டீயைத்தான் மக்கள் விரும்பிக் குடிப்பார்கள். இதனால், 'மில்க்டீ கூட்டணியாக நாங்கள் மூன்று பேரும் கைகோர்த்துள்ளோம்' என்கிற ட்விட்டும் அதிகளவில் பகிரப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே பதற்றம் அதிகரிப்பதை போல தைவானுடனும் மோதல் போக்கை கம்யூனிச தேசம் கடைபிடித்து வருகிறது. கடந்த சில நாட்களில் தைவான் வான்வெளியில் 4 முறை சீன விமானங்கள் பறந்துள்ளன. இதுவும் தைவான் மக்களை கடுப்பேற்றியுள்ளது. இந்தியாவுக்கு தைவானிலிருந்து  அதீத ஆதரவு கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணம். தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் 2020 ம் ஆண்டின் தொடக்கத்தில் , 'தைவான் ஒரு சுதந்திர நாடு. சீனா யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். ஆனால், சீனாவின் அங்கம்தான் 'சீன தைபே' என்று ஜின்பிங் கொக்கரிக்கிறார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்