‘தந்தையை அணைத்தபடி சடலமாகக் கரை ஒதுங்கிய 2 வயது மகள்..’ உலகை உலுக்கும் புகைப்படம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சட்டைக்குள் உடல் புதைத்து தந்தையின் கழுத்தைப் பற்றியபடி குழந்தை ஒன்று சடலமாகக் கரை ஒதுங்கியுள்ள புகைப்படம் உலகை உலுக்கியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரைச் சேர்ந்த ஆஸ்கார் அல்பெர்டோ என்பவர் பிழைப்புக்காக அமெரிக்காவுக்கு குடியேறுவதற்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆஸ்கார் தனது 2 வயது மகள் மற்றும் மனைவியுடன் நதியைக் கடந்து அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார்.

இதில் ஆற்றில் மூழ்கிய ஆஸ்கார் தனது மகளுடன் மெக்ஸிகோவின் ரியோ கிராண்டே நதியில் சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளார். அதை ஜூலியா லி டாக் என்ற பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபற்றிப் பேசியுள்ள அவர் மனைவி, “நான் ஆஸ்காரிடம் எவ்வளவோ சொன்னேன் அங்கு செல்ல வேண்டாம் என்று. அவர்தான் சொந்த வீடு கட்ட வேண்டும் என்றார். மகள் தடுமாறியதும் அவளைக் காப்பாற்ற ஆஸ்கரும் விழுந்தார். இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்” எனக் கூறியுள்ளார்.

உலகை உலுக்கிய இந்தப் புகைப்படத்தைத் தொடர்ந்து பிழைப்புக்காக இடம்பெயரும் மக்களுக்கு ஆதரவாக மீண்டும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ட்ரம்பின் கொள்கைக்கு எதிராகவும் கண்டனங்கள் அதிகரித்துள்ளன.  அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் அமைந்துள்ள ரியோ கிராண்டே நதியில் மட்டும் கடந்த ஆண்டு 283 பேர் இடம்பெயரும்போது இறந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மெக்ஸிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்க சுமார் 670 மைல் தொலைவுக்கு உயரமான சுவர் ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

DROWNED, FATHERANDDAUGHTER, #DISTURBINGPHOTO

மற்ற செய்திகள்