’சர்ப்ரைஸ் கொடுக்க பொம்மையை வாங்கிய பெற்றோர்’... 'அட, கடவுளே இதையும் விட்டு வைக்கலியா'... பொம்மைக்குள் இருந்த பார்சலை பார்த்து ஆடிப்போன சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மகளுக்கு ஆசையாக வாங்கிய பொம்மையில் இப்படி ஒரு பொருள் இருக்கும் எனக் கனவிலும் அந்த பெற்றோர் நினைத்திருக்க மாட்டார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளுக்குப் பொம்மை ஒன்றை சர்ப்ரைஸாக வாங்கி கொடுக்க திட்டமிட்டார்கள். அந்த வகையில் ஏற்கனவே பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் கடையில் அந்த பெற்றோர் பொம்மை ஒன்றை வாங்கியுள்ளனர். பொம்மையை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்ற பெற்றோர், அது ஏற்கனவே பயன்படுத்திய பொம்மை என்பதால் அதை முறையாகக் கழுவி சுத்தப்படுத்தி மகளிடம் கொடுக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து அந்த குழந்தையின் தாய் பொம்மையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பொம்மையின் உள்ளே இரண்டு பிளாஸ்டிக் கவரில் பார்சல் ஒன்று இருந்துள்ளது. அதில் என்ன இருக்கிறது என திறந்து பார்த்தபோது, அந்த தாய் அதிர்ச்சியில் கத்தியே விட்டார். மனைவியின் சத்தம் கேட்டு அவரது கணவன் ஓடி வந்த நிலையில், அவரும் அந்த பார்சலை பார்த்து அதிர்ந்துபோனார்.

அந்த பிளாஸ்டிக் கவரில் கிட்டத்தட்ட 5000 போதை மாத்திரைகள் இருந்துள்ளன. இதையடுத்து அந்த பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், விரைந்து வந்த போலீசார் அந்த போதை மாத்திரைகளைக் கைப்பற்றினார்கள். துரிதமாகச் செயல்பட்டு போலீசாரை அழைத்ததற்கு, போலீசார் அந்த பெற்றோரைப் பாராட்டினார்கள்.

இதற்கிடையே குழந்தைகள் விளையாடும் பொம்மைக்குள் போதை மாத்திரைகள் இருந்தது அந்த தாயை வெகுவாக பாதித்து விட்டது. ஒரு வேளை பொம்மையைச் சுத்தம் செய்யாமல் குழந்தையிடம் கொடுத்திருந்தால் அந்த மாத்திரைகள் இருந்தது நிச்சயம் தெரிந்திருக்காது. அந்த மாத்திரைகள் குழந்தையின் கையில் கிடைத்திருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும், நினைக்கவே மனது நடுங்குகிறது என அந்த தாய் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

இந்த செய்தி வெளியானதும் அரிசோனா பகுதியில் வசிக்கும் மக்கள் கலக்கமடைந்தனர். இருப்பினும் பெற்றோர் அந்த மாத்திரைகளைக் கண்டுபிடித்து விட்டதால் அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்