'நடுவானில் திடீரென இருக்கையை விட்டு எழும்பிய நபர்'... 'கழிவறைக்கு செல்வதாக நினைத்த சக பயணிகள்'... கண்ணிமைக்கும் நேரத்தில் செய்த அதிர்ச்சி செயல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது பயணி ஒருவரால் மொத்த விமானத்திலும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நாஷ்வில் பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 386 என்ற பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பயணி ஒருவர் தனது இருக்கையை விட்டு எழும்பியுள்ளார். சக பயணிகள் அவர் கழிவறைக்குச் செல்வதாக நினைத்த நிலையில், விமானி அறைக்குள் அதிரடியாக நுழைய முயன்றுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ந்த மற்ற பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உடனே சுதாரித்துக் கொண்டு அந்த பயணியைப் பிடித்து கீழே தள்ளி, அவரது கை கால்களை கயிற்றால் கட்டிப் பிடித்து வைத்தனர். அந்த பயணி விமானி அறைக்குள் நுழைந்து விமானத்தைக் கடத்த திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இதனையடுத்து, விமானம் Albuquerque விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. Albuquerque விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதுடன், பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டி வைக்கப்பட்டிருந்த பயணியை காவல்துறை மற்றும் எஃப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடுவானில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்