'ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட இப்படி ஒரு அக்கப்போரா'... 'கதிகலங்கிய போலீசார்'... கொஞ்ச நேரத்தில் சிட்டியை அலறவிட்ட பைலட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐஸ்கிரீம் வாங்குவதற்காக பைலட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் உள்ள டிஸ்டேல் நகரில் சுமார் 3000 பேர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நகரின் மையப்பகுதியில் கடந்த மாதம் 31ஆம் தேதி சிவப்பு வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஒன்றும் புரியாமல் திகைத்துப் போனார்கள்.

இதற்கிடையே அந்த மாகாணத்தின் மருத்துவ விமான ஆம்புலன்சின் அதே வண்ணம் அந்த ஹெலிகாப்டருக்கும் பூசப்பட்டிருந்ததால், அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். மேலும், அவசர மருத்துவ உதவிக்காக ஒருவேளை ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நினைத்துள்ளனர்.

இதனால் பரபரப்பான போலீசார் உடனே கட்டுப்பாடு அறையைத் தொடர்பு கொண்டு ஏதேனும் மருத்துவ சேவைக்காக ஹெலிகாப்டர் போனதா என விசாரணையைத் தொடங்கினார்கள். அப்போது தான் போலீசாருக்கு என்ன நடந்தது என்ற முழு விவரமும் தெரிய வந்தது. அதில், ஹெலிகாப்டரை இயக்கிய 34 வயதான பைலட், ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதால் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தரையிறக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பைலட் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர். அவரிடம் ஹெலிகாப்டரை இயக்குவதற்கான லைசன்ஸ் இருந்தாலும், பார்க்கிங் இல்லாத இடத்தில் அவர் அதனை இறக்கியதும், ஐஸ்கிரீம் சாப்பிடுவது ஒன்றும் அவசரத்தேவை இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

ஆக மொத்தம் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை பைலட் இறக்கி அந்த மாகாண மக்களைக் கதிகலங்க வைத்துவிட்டார் அந்த பைலட்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்