யாரு ‘சாமி’ நீங்க.. அமெரிக்க தேர்தல் முடிவை ‘2 வாரத்துக்கு’ முன்னாடியே கணித்த நபர்.. தீயாய் பரவும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என 2 வாரங்களுக்கு முன்பே கணித்து சொன்ன பெர்னி சாண்டர்ஸின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதை நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 தொகுதிகளை கைப்பற்றி பின் தங்கியுள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்றும், அதற்கு டிரம்ப் எவ்வாறு நடந்து கொள்வார் என்றும் ஜனநாயக கட்சியின் உயர்மட்ட செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் என்பவர் அளித்த நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், அமெரிக்க தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என நிருபர் கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த பெர்னி சாண்டர்ஸ், ‘நீங்கள் முக்கியமான ஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள். இதனை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு ஓட்டும் எண்ணப்பட வேண்டும். இதன் காரணமாகவே நாம் ஒரே நாளில் முடிவுகளைப் பெற முடியாது. ஃப்ளோரிடா, வெர்மண்ட் ஆகிய மாகாணங்களை போல் இல்லாமல் பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் தபால் ஓட்டுகளே அதிகம் பதிவு செய்யப்படும்.

ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் (ஜோ பைடன்) தபால் ஓட்டுகளையே இந்த மாகாணங்களில் பதிவு செய்வர். ஆனால் குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள் (டிரம்ப்) நேரடியாக வந்து வாக்களிப்பார்கள். இவ்வாறு இருக்கையில் வாக்கு எண்ணிக்கையின்போது மிச்சிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் முதலில் குடியரசு கட்சி வெற்றி பெறுவதுபோல் இருக்கும். இதனால் டிரம்ப், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம். அமெரிக்க மக்களுக்கு அவர் நன்றியும் கூறலாம்.

ஆனால், அடுத்த நாள் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்போதுதான் மிச்சிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றது தெரியவரும். இதனால் தேர்தலில் மோசடி நடந்திருக்கும் என்று ட்ரம்ப் கூறுவார். நாங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என சொல்வார்’ என பெர்னி சாண்டர்ஸின் தெரிவித்திருந்தார்.

இதைப்போலவே தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் முன்னதாக ட்விட்டரில் தெரிவித்தார். பின்னர் தேர்தல் முடிவுகள் விசித்திரமாக உள்ளது. ஜனநாயக கட்சியினர் வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்துவிட்டனர் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெர்னி சாண்டர்ஸ் கூறியதுபோலவே டிரம்ப் பேசியதால் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நேர்காணல் வீடியோ 24 மணிநேரத்தில் 27 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்