18 வருஷமா விமான நிலையத்திலேயே தங்கியிருந்த நபர்.. டெர்மினல் படம் உருவாக காரணமே இவர்தானா ?.. ஆச்சர்யத்துக்கு பின்னால் இருக்கும் சோகம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரான்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக தங்கியிருந்த ஈரானை சேர்ந்த நபர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 2.5 வருஷத்துக்கு பிறகு தரையிறங்கிய ஆளில்லா விண்வெளி விமானம்.. வரலாற்றில் புதிய சாதனை.. முழு விபரம்..!

ஈரான் நாட்டை சேர்ந்தவர் மெஹ்ரான் கரிமி நாசேரி. 1988 ஆம் ஆண்டு பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து செல்வதே இவருடைய லட்சியமாக இருந்தது. ஆனால், காலம் அவருக்கு கனிவு காட்டவில்லை. அவரிடத்தில் போதுமான பயண ஆவணங்கள் இல்லை என்பதால் பிரான்சில் உள்ள ரோஸி சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் அவர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால், அதுவே தனது வீடாகிப்போகும் என அவர் அப்போது நினைத்திருக்க வாய்ப்பில்லை.

இருப்பினும் அதுவே நடந்தது. ரோஸி சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் வசிக்க துவங்கினார் நாசேரி. ஆரம்பத்தில் அவர் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்தாலும், பின்னர் அவர் ஒரு விருந்தினர் போலவே விமான நிலையத்தில் வசித்து வந்திருக்கிறார்.

1945 ஆம் ஆண்டு ஈரானில் பிறந்தவரான நாசேரி, தனது தாயை தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கிறார். குடியேற்ற ஆவணங்கள் இல்லாது போனதால் பல நாடுகளில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இறுதியாக பிரான்சின் ரோஸி சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் நாசேரி. ஒருகட்டத்தில் இவர் பிரான்சில் வசிக்க அரசு அனுமதி கொடுத்தது. ஆனாலும், அவர் விமான நிலையத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்திருக்கிறார்.

இதனால் உள்ளூரில் பிரபலமான நாசேரியை சில ஊடகங்கள் பேட்டியெடுக்கவும் செய்தனர். அதன்படி உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்தார் நாசேரி. கடந்த 2004 ஆம் ஆண்டு தி டெர்மினல் எனும் படத்தை இயக்கினார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இதில் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது நாசேரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் விமான நிலையத்திலேயே நாசேரி மரணமடைந்திருப்பதாக அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். இயற்கையான முறையில் அவருடைய மரணம் நிகழ்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருடைய உடமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது. அதில் சில ஆயிரம் யூரோக்கள் இருந்ததாக தெரிகிறது. 18 வருடங்களாக விமான நிலையத்திலேயே வசித்துவந்த நாசேரி மரணமடைந்திருப்பது உள்ளூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | திருமணமாகி 3 மாசத்தில் கணவருக்கு ஸ்லோ பாய்சனா.?. தமிழகத்தை உலுக்கிய மனைவியின் வாட்ஸ் அப் சாட்.!

IRANIAN, LIVES, PARIS AIRPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்