'உங்க இன்ஸ்டாகிராமை Deactivate பண்ணுங்க'... 'போட்டோஸ் எல்லாம் Delete பண்ணுங்க'... ஆப்கான் வீராங்கனை வெளியிட்ட பகீர் தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அமெரிக்கப் படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.  இதனை பயன்படுத்தி தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது. அந்தவகையில் ஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் கலிதா போபல் (Khalida Popal).

இதுதொடர்பாக பேசிய அவர், ''எங்கள் நாட்டின் கால்பந்தாட்ட வீராங்கனைகள் எனக்கு போன் செய்து வருகின்றனர். நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம் இவை தான். உங்களது சமூக வலைத்தள கணக்குகளை முடக்குங்கள், உங்களது புகைப்படங்களை அழியுங்கள், எங்காவது தப்பிச் சென்று மறைந்து கொள்ளுங்கள், உங்களைக் கால்பந்தாட்ட வீராங்கனை எனத் தெரிந்த அக்கம் பக்கத்தினரிடம் இருந்து தள்ளி இருங்கள் என இதையெல்லாம் அவர்களிடம் கனத்த இதயத்துடனே சொல்ல வேண்டி உள்ளது.

அவர்களது உயிருக்கு தற்போது அங்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நாட்டில் மகளிர் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காகக் கால்பந்தாட்டத்தை முன்னெடுத்தவர்கள் நாங்கள். ஆனால் இன்று அதை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. பெண்கள் நம்பிக்கையை இழந்துள்ளார்கள். அவர்களது கண்களில் கண்ணீர் குளமாகப் பெருக்கெடுத்துள்ளது” என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகத் தான் ஆப்கான் பெண்கள் கல்வி, விளையாட்டு அரசு பதவி மற்றும் அரசு வேலைகளில் சேர்ந்து பல கட்டமைப்புகளை உடைத்து வெளியே வந்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் தற்போது ஆட்சிக்குத் தாலிபான்கள் வரும் நிலையில் மீண்டும் பெண்களைப் பல நூறு வருடங்களுக்குப் பின்னால் இழுத்துச் சென்று விடுவார்களே என்பது தான் பலரின் அச்சமாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்