‘காபூல் வெடிகுண்டு தாக்குதல்’!.. யார் இந்த ஐஎஸ்-கோராசன் அமைப்பு..? தாலிபான்களுக்கு இவர்களுக்கும் என்ன பகை..? திடுக்கிட வைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், அங்கு ஆட்சியமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே ஆப்கானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் முயற்சியில் உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேபோல் ஆப்கான் மக்களும் தாலிபான்களுக்கு பயந்து அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் அமைந்துள்ள விமான நிலையத்துக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஒரு பகுதியான ஐஎஸ்-கோராசன் (IS-K, Islamic State Khorasan Province) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஐஎஸ்-கோராசன் என்பது பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தாலிபான் என்ற அமைப்பில் இருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களும், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் சேர்ந்து உருவாக்கிய பயங்கரவாத அமைப்பாகும். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு விஸ்வாசமாக இருப்போம் என கூறி இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

பின்னர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், ஐஎஸ்-கோராசன் அமைப்பில் உள்ளவர்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டது. இதனை அடுத்து ஐஎஸ்-கோராசன், ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தது. ஐஎஸ்-கோராசனுக்கும் தாலிபான்களுக்கும் மோதல் ஏற்பட காரணம் மத அடிப்படைவாதம் தொடர்பானது. தாலிபான்கள், ஐஎஸ்-கோராசன் ஆகிய இருவரும் இஸ்லாமின் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள்.

ஆனால் தாலிபான்கள், இஸ்லாமிய கொள்கைகளுக்கு புத்துயிர் ஊட்ட சன்னி பிரிவுக்குள் தொடங்கப்பட்ட இயக்கமான ‘தியோபாண்டி’ இயக்கத்தை பின்பற்றுபவர்கள். ஐஎஸ்-கோராசன் அமைப்பினரோ சன்னி பிரிவுக்குள் தொடங்கப்பட்ட மற்றொரு மறுமலர்ச்சி இயக்கமான ‘சலாபிஸ்ட்’ இயக்கத்தை பின்பற்றுபவர்கள்.

இதில் ஐஎஸ்-கோராசன் அமைப்பினர், தாலிபான்களை விடவும் தீவிரமாக மத அடிப்படைவாதத்தை பின்பற்றி வருகின்றனர். தாங்களே உண்மையான ஜிஹாத்தை மேற்கொள்வதாக நம்புகின்றனர். அதனால் இவர்களுக்கும் தாலிபான்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது.

ஐஎஸ்-கோராசன் என்பது தாலிபான்களை விட மிகவும் சிறிய அமைப்பு. கிழக்கு ஆப்கானிஸ்தானில், ஐஎஸ்-கோராசன் அமைப்பின் உறுப்பினர்கள் 1500 முதல் 2200 இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அதேபோல் தெற்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவில் இருக்கும் இந்த ஐஎஸ்-கோராசன் அமைப்பினர், வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் உள்ள சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

ஆனால் அமெரிக்க படைகளின் தாக்குதலாலும், தாலிபான்களின் தாக்குதலாலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்தனர். சமீப காலமாக ஐஎஸ் கோராசன் அமைப்பின் நடவடிக்கைகள் மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைப்பு பெண்கள் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் கர்ப்பிணி பெண் உட்பட செவிலியர்கள் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் காபூல் விமான நிலையம் அருகே ஐஸ்-கோராசன் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளது. அதனால் தாலிபான்களுக்கும்-ஐஎஸ் கோராசன் அமைப்பினருக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்