'ஐயுசி' கட்டணம்.. இன்னும் '2 ஆண்டுகளுக்கு' தொடரும்.. வாடிக்கையாளர்கள் 'கடும்' அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பொதுவாக ஒரு நெட்வொர்க்கில் இருந்து பிற நெட்வொர்க்குக்கு கால் செய்து பேசும்போது அந்த அழைப்பை அவர்கள் ஏற்று பேசுவதற்கான சிறு கட்டணத்தை அந்த நிறுவனம் செலுத்த வேண்டும். இது நிறுவனங்களுக்கான இணைப்பு (ஐயுசி) கட்டணம் என அழைக்கப்படும். இதற்கு ஒவ்வொரு காலுக்கும் 6 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும் என டிராய் அறிவித்தது.

ஜியோ நிறுவனம் சந்தையில் கால் எடுத்து வைத்ததுமே, தனது வாடிக்கையாளா்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு வசதியை முழுமையாக அளித்து வந்தது. வாடிக்கையாளா்களிடமிருந்து அழைப்புக் கட்டணம் வசூலிக்காவிட்டாலும், போட்டி நிறுவன தொலைபேசி எண்களுக்கு அவா்கள் விடுக்கும் அழைப்புகளுக்காக, அந்த நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ ஐயுசி கட்டணத்தை அளித்து வந்தது.

அந்த வகையில், ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ இதுவரை ரூ.13,500 கோடி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், பிற நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் தங்களது வாடிக்கையாளா்களுக்கு ‘மிஸ்டு கால்’ மட்டுமே தந்து பேசுவதால், அந்த நிறுவனங்களிடமிருந்து ஐயுசி கட்டணங்கள் வசூலாவதில்லை. இதனால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று ஜியோ சமீபத்தில் டிராயிடம் புகார் கூறியது.

இதைத்தொடர்ந்து விரைவில் ஐயுசி கட்டணத்தை டிராய் முடிவுக்கு கொண்டுவரும் என தகவல்கள் வெளியாகின. மேலும் 2020 ஜனவரி 1 முதல் இந்த ஐயுசி கட்டணம் இருக்காது என்றும் கூறப்பட்டது. முன்னதாக இந்த ஐயுசி கட்டணம் 14 பைசாவாக இருந்தது, 2 ஆண்டுகளுக்கு முன்பு  டிராய் அதனை 6 பைசாவாக குறைத்தது.

இந்தநிலையில் இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஐயுசி கட்டணம் தொடர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐயுசி கட்டணம் தொடரும் பட்சத்தில் வோடபோன், ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஜியோ கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கையை ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் இது ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சி தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்