'பப்ஜி மதன் விவகாரம்'... 'காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு'... 'சார், இவங்களையும் கொஞ்சம் கவனிங்க'... நெட்டிசன்கள் வைத்துள்ள பரபரப்பு கோரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

யூடியூப்பில் பப்ஜி விளையாட்டின் போது, ஆபாசமாகப் பேசிய மதன் போலீசாரால் நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாகப் பேசி பப்ஜி விளையாட்டைத் தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் மதன். தலைமறைவான இவரை நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து மதனைச் சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்குச் சோதனை நடத்தினர்.

இதனையடுத்து கைது செய்த மதனை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது ஊடக ஒளிப்பதிவாளர்கள், பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் கூடி நின்று மதனை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் காட்சிகளைப் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

மதனை காவல் ஆணையர் அலுவலக நுழைவு வாயிலிலிருந்து உள்ளே அழைத்துச் செல்லும் வரை ஊடக ஒளிப்பதிவாளர்கள் காட்சியைப் பதிவு செய்தனர். அப்போது திடீரென  மதன், ஒளிப்பதிவாளர்களைப் பார்த்து, "நான் என்ன ப்ரைம் மினிஸ்டரா, என்ன வளைச்சு வளைச்சு எடுக்கிறீங்க" என கேட்டார். மதனை அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளர் "நீ அக்யூஸ்ட் வா" எனக் கூறியபடி உள்ளே கொண்டு சென்றனர்.

முதல் மாடியில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் வைத்து மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆபாச பேச்சு வீடியோ குறித்தும், வீடியோவில் பேசக்கூடிய தோழிகள் குறித்தும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மேலும் பணப்பறிப்பில் மதன் ஈடுபட்டுள்ளாரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்திருப்பதாக மத்திய குற்றபிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே மதனிடம் பணம் கொடுத்து யாராவது ஏமாந்திருந்தால் அவர்கள் காவல்துறையை அணுகலாம் என சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஊடங்களில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீசாருக்கு பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வருகின்றன.

ரவுடி பேபி சூர்யா என்ற பெண் நீண்ட நாட்களாக யூடியூபில் ஆபாச வார்த்தைகளைப் பேசியும், தனக்குப் பிடிக்காதவர்களைத் திட்டியும் வீடியோ வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுப்பு லெட்சுமி என்கிற ரவுடிபேபி சூர்யா பப்ஜி மதனை விட மிக ஆபாசமாகப் பேசியும் சிலருக்குக் கொலைமிரட்டல் விடுத்து வருவதாகவும் பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்