'போலீசிடம் சிக்கி நொந்து நூடுல்ஸ் ஆக வந்த 'மதன்'... 'என்ன Bro நீங்க, இத பண்ணி எஸ்கேப் ஆகியிருக்கலாம்'... நெட்டிசன் கொடுத்த அல்டிமேட் ஐடியா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏழைகளுக்கு உதவுவதாகக் கூறி மதன் பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டதாக 100க்கும் மேற்பட்டோர் புகார் அனுப்பி உள்ளனர்.

பப்ஜி விளையாட்டு மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தனது யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் மதன் பேசி வந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து யூடியூப் சேனல் நடத்தி வந்த மதனைத் தேடிவந்தனர்.

இந்நிலையில் யூடியூப் சேனல் அட்மினாக இருந்த அவருடைய மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் மதனைக் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. மதன் நடத்தி வந்த யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தில் சொகுசு கார் ஆடம்பரமான பங்காளாக்கள் வாங்கி குவித்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து மதனின் வங்கிக் கணக்குகளில் பண இருப்புகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதன் நடத்தி வந்த சர்ச்சைக்குரிய யூ-டியூப் சேனல் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதன் நடத்தி வந்த யூடியூப் சேனலை தடை செய்யக்கோரி போலீசார் சார்பில் யூடியூப் சேனல் நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டது.

அந்த கடிதத்தைத் தொடர்ந்து யூடியூப் சேனல் நிர்வாகம் மதன் நடத்தி வந்த சேனலை தடை செய்தது. மேலும் அந்த யூடியூப் சேனலில் 2 ஆண்டுகளுக்கான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் மதன் பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாக இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளனர். ஏழைகளுக்கு உதவுவதாகக் கூறி மதன் பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டதாக 100க்கும் மேற்பட்டோர் புகார் அனுப்பி  உள்ளனர்.

இதனிடையே மதன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அழைத்து வரும்போது பத்திரிகையாளர்கள் பலரும் மதனைப் போட்டோ எடுத்தனர். அப்போது அவர்கள் மீது கோபப்பட மதன், நான் என்ன பிரதமரா, ஏன் என்னைப் போட்டோ எடுக்கிறீர்கள் என கோபப்பட்டார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கமெண்ட், வைரலாகி வருகிறது.

அதில், ''இவ்வளவு கூட்டத்துல ஒரு Smoke போட்டு எஸ்கேப் ஆகி இருக்கலாம், என்னத்த Pro பிளேயரோ'' எனப் பதிவிட்டுள்ளார். இதை அந்த நெட்டிசன் சீரியஸாக போட்டாரா அல்லது விளையாட்டுக்குப் போட்டாரா என்பது தெரியாத நிலையில், ஒரு தடை செய்யப்பட்ட விளையாட்டு எந்த அளவிற்கு இன்றைய தலைமுறையினரிடையே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு மதன் விவகாரமே ஒரு எடுத்துக்காட்டாகும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்