"சும்மா போறவன புடிச்சாங்க.. அதனால என் சாவுக்கு இவங்கதான் காரணம்!".. போலீஸ் முன்பு தீ வைத்துக்கொண்ட இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆங்காங்கே ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஊரடஙகினை மீறி வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்கின்றனர். அவ்வகையில் ஆம்பூர், அண்ணாநகரைச் சேர்ந்த முகிலன் என்கிற இளைஞர் பைக்கில் வெளியில் சுற்றியதால், தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தியேட்டருக்கு பக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், முகிலன் வந்த பைக்கை தடுத்து நிறுத்தியதோடு, உரிய ஆவணங்கள் இல்லாததால், பைக்கை பறிமுதல் செய்து, மைதானத்தில் நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அருகில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு நடந்தே சென்று, அங்கிருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் தலையில் ஊற்றி தீவைத்துக் கொண்டு, போலீஸார் இருக்கும் இடத்துக்கு வந்து தீவைத்துக் கொளுத்திக் கொண்டார். மேலும், “சும்மா போறவனை போலீஸ் பிடிச்சாங்க. அதான் கொளுத்திகிட்டேன். என் சாவுக்கு போலீஸ்தான் காரணம்” என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது.

இதனிடையே முகிலன் 90 சதவீத தீக்காயத்துடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் முகிலனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதாகவும், சம்பவத்தின் போது அவர் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அறிந்த திருப்பத்தூர் எஸ்.பி.விஜயகுமார், சம்பவ இடக்கு விரைந்து சென்று விசாரித்து வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்