'அரசு வேலைக்கான ஆர்டர் வந்திருச்சு’... ‘நம்பிச் சென்ற இளம் தம்பதிக்கு’... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில், அரசு வேலைக்கு தந்த பணத்தை திருப்பிக் கேட்டதால், பேராசிரியரை விஷம் கலந்த கோவில் பிரசாதத்தை கொடுத்து, கொலை செய்ததாகக் கூறப்படும்  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான கார்த்திக். இவரது மனைவி சரண்யா (29). இருவரும் கடந்த திங்கள்கிழமை அன்று, வியாசர்பாடி எம்.கே.பி நகரில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் கார்த்திக் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சரண்யா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தனியார் கல்லூரி பேராசிரியராக இருந்த கார்த்திக், ஆட் குறைப்பு நடவடிக்கைகையால் பணியை இழந்தார். இதனால் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த அவர், அரசு வேலை பெறுவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு வியாசர்பாடி எம்.கே.பி நகரை சேர்ந்த வேலாயுதம் என்பவரிடம் ரூ.3 லட்சம் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் அவர் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தார். கார்த்திக், சரண்யா தொடர்ந்து பணத்தை கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த வேலாயுதம், ‘அரசு வேலைக்கான பணி நியமன ஆணை’ வந்துள்ளதாக கூறியதால் அதை வாங்க இருவரும் சென்றனர்.

அப்போது அவர், கணவன்-மனைவியிடம் கோவில் பிரசாதம் எனக் கூறி ஒரு பொடியை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சாமி பிரசாதம் என நம்பி, இருவரும் சாப்பிட்டனர். கார்த்திக்கிற்கு, சில நிமிடத்தில் மயக்கம் வந்துள்ளது. உடனடியாக, சரண்யா கையில் இருந்த பிரசாதத்தை தட்டிவிட்டு, கார்த்திக் அங்கிருந்து புறப்பட்டார். சில நிமிடங்களில், கார்த்திக் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பிரசாதம் கொடுத்துவிட்டு தலைமறைவான வேலாயுதம் மற்றும் அவரது மனைவி இருவரையும் பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHENNAI, MURDER, TAMILNADU, YOUTH, PRASADHAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்