'என்னோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான்'... 'என் கேரியரும் போச்சு'... காதல் கணவனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆசை ஆசையாய் திருமணம் செய்த பெண், தற்போது அந்த காதல் கணவனால் நடுத்தெருவுக்கு வந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்துவருபவர் ராஜேஷ். 26 வயதான இவர் மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் கனிமொழி  என்ற பெண்ணும் காதலித்த நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 3 வருடமாகியும் குழந்தை இல்லை. இதையடுத்து கனிமொழிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைக் குறைப்பதற்குக் கனிமொழி உடற்பயிற்சி கூடத்தை நாடியுள்ளார்.

இந்த விவகாரத்தில் கணவன், மனைவிக்குள் அவ்வப்போது பிரச்சனை எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்தில் கனிமொழி சேர்ந்து பயிற்சி மேற்கொண்டார். தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் கனிமொழி, சில நாட்களாகச் சோகத்திலிருந்துள்ளார். அவரால் உடற்பயிற்சியும் செய்ய முடியாமல் இருந்துள்ளது. இதைக் கவனித்த ஜிம் மாஸ்டர் யோகேஷ் கண்ணா, எதனால் சோகமாக இருக்கிறீர்கள் என விசாரித்துள்ளார்.

அப்போது கனிமொழி, தனது கணவன் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை துன்புறுத்தி வருவதாகவும், தனக்குக் கணவர் ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனைக்கேட்ட யோகேஷ் கனிமொழியை மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கவைக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த தகவலைக் கனிமொழியிடம் கூறிய அவர், பெண்கள் விடுதியில் சென்று தங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். உடனே கனிமொழியும் கணவரை விட்டுப் பிரிந்து செல்ல முடிவெடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த கணவர் ராஜேஷ், கனிமொழியை வெளியில் செல்ல விடாமல் தடுத்துள்ளார். இதனால் யோகேஷ் கண்ணா தனது நண்பர்கள் உதவியுடன் வீட்டிலிருந்த மனைவி கனிமொழியை அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் கனிமொழி வீட்டை விட்டுச் சென்று மூன்று நாட்களுக்குப் பிறகு யோகேஷ் கண்ணா செல்போனில் ராஜேஷை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கனிமொழியின் கல்வி சான்றிதழ்கள், ஜாதகம் உள்ளிட்டவற்றைக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார்.

ஆனால்  ராஜேஷ் காவல்நிலையத்தில் தனது மனைவி, ஜிம் மாஸ்டருடன் நகைகள் மற்றும் பணத்துடன் ஓடி விட்டதாகக் கூறி புகார் ஒன்றை அளித்துள்ளார். புகார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், எனக்கு ராஜேஷுடன் வாழப் பிடிக்கவில்லை எனவும் தனக்கு விவாகரத்து பெற்றுத் தரவேண்டும் எனவும் கனிமொழி போலீசாரிடம் கூறியுள்ளார். இதனால் போலீசார் கனிமொழியை விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச்சூழ்நிலையில் கனிமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய கனிமொழி, ''தனது கணவர் ராஜேஷ் தன்மீது அவதூறாகப் புகார் தெரிவித்து வருகிறார். இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனது கணவரின் தொந்தரவு தாங்கமுடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். தற்போது விடுதியில்தான் தங்கியுள்ளேன். என்னை எனது ஜிம் மாஸ்டருடன் இணைத்து வைத்து தவறாகப் புகார் கூறி வருகிறார். என்னை மட்டுமல்லாமல் எனது பெற்றோர் பெயரையும் அசிங்கப்படுத்தி வருகிறார்.

எனது சான்றிதழ்கள் எல்லாம் அவரிடம் தான் இருக்கிறது. அதை ராஜேஷ் கொடுக்க மறுக்கிறார். இதனால் எந்த வித அரசு வேலை உள்ளிட்ட பணிகளுக்கும் என்னால் விண்ணப்பிக்க முடியவில்லை. அதோடு ஊடகங்களில் எனது புகைப்படம் மற்றும் என்னைக் குறித்து தவறான தகவல் வெளியானதால் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது தனித்து விடப்பட்ட நிலையில் இருக்கிறேன். இதிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறேன் என்று தெரியவில்லை. அவனை சும்மாவிட மாட்டேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். என் வாழ்க்கையே நாசமா போச்சு. எனது கேரியரை ஸ்பாயில் பண்ணிட்டான்''  எனத் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

காதல் வந்தவுடன் பெண்கள் எடுக்கும் அவசர முடிவுகள் அவர்களது வாழ்க்கையை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதற்குச் சான்றாக  அமைந்துள்ளது இந்த சம்பவம். தற்போது பெற்றோர், குடும்பம் என அனைத்தையும் இழந்து நிற்பது என்னவோ அந்த பெண் தான் என்பது சோகத்தின் உச்சம். ஆதரவற்று நிற்கும் தன்னை பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே கனிமொழியின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்