‘அவரு என் அப்பா தாங்க’... ‘உதவித் தொகை எடுக்க வந்தபோது’... ‘வழிதவறி மயங்கிக் கிடந்த முதியவர்’... ‘மனிதநேயத்தோடு செயல்பட்ட இளைஞர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனிதநேயம் இன்னும் மரிக்கவில்லை என்பதற்கு உதாரணமாக உதவித் தொகை எடுக்க வந்த முதியவர், வழி தவறி 5 நாட்களாக தவித்த நிலையில், இளைஞரின் மனிதநேய முயற்சியால் மகனிடம் சேர்க்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பரமக்குடி அடுத்த சாத்தனூரைச் சேர்ந்தவர் 80 வயதான நாகரத்தினம் என்ற முதியவர். இவர் மனைவி இறந்து விட்டநிலையில், மூத்த மகன் குமாருடன் ராமநாதபுரத்தில் வசித்து வந்தார். முதுமையின் காரணமாக சரியாக பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்தார். இந்நிலையில், பரமக்குடி ஸ்டேட் வங்கியில் முதியோர் உதவித் தொகை வாங்குவதற்காக ரயிலில் கடந்த 26-ம் தேதி சென்றுள்ளார்.

பணத்தை வங்கியில் இருந்து எடுத்த முதியவர், தவறுதலாக சென்னை செல்லும் ரயிலில் ஏறி, தஞ்சையில் இறங்கியுள்ளார். கடந்த 5 நாட்களாக வழி தெரியாமல் சுற்றி திரிந்த நிலையில், நேற்று முன்தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் பசியால் மயங்கிக் கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற பலரும் சென்ற பலரும் கண்டுக்கொள்ளாதபோது, வல்லத்தை சேர்ந்த ரியாசுதீன் என்ற இளைஞர் மட்டும் முதியவரின் அருகில் சென்று விசாரித்துள்ளார்.

ஆனால் முதியவர் சாத்தனூர் என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் தெரியாததால், சாப்பாடு வாங்கிக் கொடுத்து, பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சாத்தனுாரைச் சேர்ந்த இருவரின் மொபைல் எண்களை பெற்று, 'வாட்ஸ் ஆப்'புக்கு முதியவர் படத்தை அனுப்பி உள்ளார். அவர்கள், பரமக்குடி, சாத்தனுார் பகுதியில் உள்ள, 'வாட்ஸ் ஆப்' குரூப்களுக்கு முதியவர் படத்தை பகிர்ந்துள்ளனர். இதை நாகரத்தினத்தின் இளையமகன் ராஜாராமன் பார்த்து, தனது அப்பா தான் அது என்று ரியாசுதீனை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

பின்னர் நேற்று அதிகாலை, ராஜாராமன் தஞ்சை வந்து, ரியாசுதீன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தனது தந்தையை அழைத்து சென்றார். முதியவர் தானே என்று நடந்து செல்லாமல் இளைஞர் செய்த காரியம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

POLICE, OLD MAN, முதியவர், நாகரத்தினம், NAGARATHINAM, TANJORE, YOUNG MAN, இளைஞர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்