'கர்ப்பிணிபோல் இருந்த பெண்கள்'... 'பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி'... 'சென்னையில் நடந்த பரபரப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கர்ப்பிணி போல் இருந்த பெண்களை பரிசோதித்ததில், திரைப்பட பாணியில் தங்கம் கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில், கடந்த புதன்கிழமையன்று மதியம், பாத்திமா(46), திரேசா(32) என்ற 2 பெண்கள் வந்தனர். கர்ப்பிணிகள் போல் இருந்த அந்த  2 பெண்களின் நடவடிக்கையில், சந்தேகம் எழுந்ததால், இருவரையும், சுங்கத்துறை பெண் அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்களது ஆடைக்குள் எந்த ஒரு பொருளும் இல்லை என்பது தெரியவந்ததுடன், அவர்களது பாஸ்போர்ட்- விசா போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களை ஸ்கேன் செய்து பார்த்தனர். 

அப்போது அவர்களது வயிற்றுக்குள், கரையாத கேப்ஸ்யூல் வடிவில், 1800 கிராம் எடை கொண்ட தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவர்களை, பல்லாவாரத்தில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களுடன் வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டி இலங்கை பெண்கள் இருவரையும் தங்கள் கார்களில் கடத்திச் சென்றனர்.

அயன் சினிமா படத்தில் வருவது போன்ற இந்த பரபரப்பான சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் கடத்தல் கும்பலை தேடி வருகிறார்கள். இதற்கிடையே கடத்தப்பட்ட 2 பெண்களும், இன்று காலையில் தனியாக சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். அங்கு சுங்க அதிகாரிகளிடம் சென்று, காரில் கடத்தியவர்கள் இனிமா கொடுத்து, தங்களது வயிற்றில் இருந்த தங்கத்தை வெளியில் எடுத்து விட்டு தங்களை விட்டுவிட்டதாக தெரிவித்தனர்.

தங்களது பாஸ்போர்ட், விசாவை கொடுத்தால் இலங்கைக்கு சென்றுவிடுவோம் என அப்பெண்கள் கூறியநிலையில், அவர்களிடம், தங்கம் கடத்தல் குறித்து, சென்னையில் உள்ள சுங்க அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இரு பெண்களையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியநிலையில், எதற்காக சுங்க அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்பது குறித்து, சந்தேகத்தின்பேரில் சுங்க அதிகாரிகளிடமும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

CHENNAI, AIRPORT, SRILANKA, WOMEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்