வீட்டை எதிர்த்து 'காதல்' திருமணம்... கண்டுகொள்ளாத பெற்றோர் ... கணவரது 'உடலுடன்' தெருவில் நின்ற பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டதால், கணவரது உடலுடன் பெண் ஒருவர் தெருவில் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 1996-ம் ஆண்டு பூதலூர் அருகேயுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டினரும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் மூர்த்தி -கவிதா இருவரும் திருச்சியில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி மூர்த்தி எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து கவிதா கணவரது உடலை எடுத்துக்கொண்டு தங்களுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு மூர்த்தியின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து காவல் நிலையத்தில் கவிதா புகாரளிக்க, அவர்கள் மூர்த்தியின் தந்தைக்கு போன் செய்து பேசியுள்ளனர்.

அப்போது அவர் தங்கள் குடும்பத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை என்று மூர்த்தி எழுதிக்கொடுத்து இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் வெளியூர் செல்வதற்கு முன் தான் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்து இருப்பதாகவும், அதில் தங்கள் வீட்டில் அத்துமீறி யாரும் நுழைய முயன்றால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல கவிதாவின் வீட்டினரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர். இரண்டு வீட்டினரும் இறங்கி வர மறுத்ததை அடுத்து, மூர்த்தியின் பூட்டிய வீட்டிற்கு முன்பு வைத்து ஊர் பெரியவர்கள் இறந்த மூர்த்தியின் உடலுக்கு சடங்குகள் செய்து அவரது உடலை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்