அமைச்சர் சொன்னபடி ‘விக்கிரவாண்டி’ ஓட்டல்களில் பஸ் நிற்காதது சரி.. ஆனால் ஏன் சீல் வைக்கல..? அதிகாரிகள் சொன்ன அடடே விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தரமற்ற விக்கிரவாண்டி உணவகங்களை சீல் வைக்காததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertising
>
Advertising

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில், 35 நெடுஞ்சாலை உணவகங்கள் உள்ளன. இதில் விக்கிரவாண்டி டோல் கேட்டில் இருந்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் வரை 7 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்த அரசு அனுமதி வழங்கப்பட்டது. இந்த உணவங்களில் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாகவும் விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதனை அடுத்து டி.ஓ எனப்படும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையிலான எஃப்.எஸ்.ஓக்கள் (உணவு பாதுகாப்பு அதிகாரிகள்) தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் அதிரடி ஆய்வு நடத்தினர். இதனை அடுத்து இந்த ஆய்வின் அறிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்களில் அரசு பேருந்துகள் உணவுக்காக நிறுத்துவதற்கு தடை விதித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டார். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனாலும் தரமற்ற உணவங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஏன் சீல் வைக்கவில்லை என பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், ‘புகாரின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, விற்கப்படும் உணவுப்பொருட்களில் விலைப்பட்டியல் ஒட்டப்படவில்லை. திண்பண்டங்களில் எம்ஆர்பி விலை (Maximum Retail Price) , பொருட்கள் தயாரிக்கப்பட்டது மற்றும் காலாவதி ஆகும் தேதி ஆகியவற்றை குறிப்பிட அறிவுறுத்தினோம். மேலும், கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும் கூறினோம்.

இதேபோல் அனைத்து உணவங்களலும் புகார் தெரிவிக்க 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் அச்சிட்ட ஸ்டிக்கரை ஒட்டியுள்ளோம். அதன்மூலம், பேருந்து பயணிகளிடமிருந்து தினமும் புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.

ஒரு குறையை சரிசெய்ய இரண்டு முறை நோட்டீஸ் வழங்கப்படும். அப்படியும் சரிசெய்யவில்லை என்றால்தான் உணவகங்களுக்கு அபராதம் விதித்து, சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனால்தான், இந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் வாரந்தோறும் ஆய்வு செய்து வருகின்றோம்’ என விளக்கம் அளித்துள்ளனர்.

VIKRAVANDI, HOTEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்