சென்னையிலிருந்து 'அவசர' பயணம் ... குவிந்த விண்ணப்பங்கள் ... யாருக்கெல்லாம் அனுமதி? .. அதிகாரிகள் விளக்கம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு அவசர பயணம் செய்ய அனுமதி கோரி ஐயாயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் யாருக்கெல்லாம் அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சில அவசர தேவைகளுக்காக சென்னையில் இருந்து வேறு மாவட்டங்கள் செல்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை காவல்துறை சார்பில் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டு திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியூர் செல்லும் மக்கள் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி அட்டை பெற்று செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 7530001100 என்ற எண்ணிலும், gpcorona2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுவரை இ மெயில் மூலம் மட்டும் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளது. இவற்றுள் காரணங்களை கேட்டறிந்து பத்து பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கடினமான இந்த சூழலை உணர்ந்து கொள்ளாமல் தகுந்த காரணங்கள் இல்லாமல் பலபேர் விண்ணப்பித்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும். அதே போல இறப்பு காரணங்களுக்காக செல்பவர்கள் ரத்த சொந்தமாக இருக்க வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையோடு வேறு மாவட்டத்திற்கு சிகிச்சைக்கு செல்லலாம். இந்த மூன்று காரணங்களுக்காக விண்ணப்பித்து நாங்கள் அழைத்தால் மட்டுமே உரிய ஆவணங்களோடு காவல் ஆணையர் அலுவலகம் வர வேண்டும். மற்றவர்கள் அலுவலகம் வாசலில் வந்து காத்திருப்பதை தவிர்க்க வேண்டும்' என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

CHENNAI, JANATA CURFEW, LOCKDOWN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்