'கிணத்தை காணவில்லை என பல புகார்கள் வருது'... 'ஆனா இனி கவலை இல்லை'... சென்னை மாநகராட்சி ஆணையர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வடிவேல் சொல்வதைப் போல கிணற்றை காணவில்லை என்று பல புகார்கள் வருகிறது, ஆனால் இனி அந்த கவலை இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னை மாநகராட்சி சார்பில், டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் என்ற புதிய தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதன்மூலம் சென்னையின் ஒட்டுமொத்த பகுதியும் எளிமையாக விரல் நுனியில் கொண்டு வரமுடியும். சென்னையின் சாலைகள் துவங்கி பூமிக்கடியில் செல்லும் போன் வயர் வரை நம்மால் சென்னை மாநகராட்சி கட்டிடத்தின் உள்ளே அமர்ந்து கொண்டே நேரில் பார்க்க முடியும். அந்த வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி விரிவடைந்துள்ளது.

குறிப்பாக ஸ்மார்ட் சிட்டியின் கீழ் சென்னை தி.நகர் மேம்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள சாலைகள், கடைகள், ஆக்கிரமிப்புகள், நீர்நிலைகள், கழிவு நீர் தொட்டிகள் என அனைத்தையும் டிஜிட்டல் மேப்பிங் முறையில் பதிவு செய்து கொள்ள முடியும். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், “ சென்னை முழுவதும் டிஜிட்டல் மேப்பிங்  கொண்டுவரப்பட்டு எத்தனை மரங்கள் உள்ளன, எத்தனை மின்சார வழித்தடங்கள் உள்ளன, எந்த இடத்தில் பார்க்கிங் வசதி தேவை, எங்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என அனைத்தும் நம்மால் டிஜிட்டல் முறையில் கண்டுகொள்ள முடியும்.

அதைவிட முக்கியமாகச் சென்னையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வீட்டினரும் சொத்து வரி கட்டி விட்டார்களா? இல்லையா? அவர்கள் கட்டக்கூடிய சொத்தின் மதிப்பு சரியானதாக இருக்கிறதா? கூடுதலாக ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என்பதை நம்மால் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும்” என்றர்.

இதற்கிடையே “வடிவேலு சினிமாவில் கிணற்றைக் காணவில்லை என்பதைப்போலப் பல புகார்கள் நமக்கு வருகின்றன. அதை எல்லாம் இனி துல்லியமாகக் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால் ஆக்கிரமிப்பு இருக்கும் இடங்களை எப்படியும் மீட்டு எடுப்போம். ஏனெனில் வருவாய்த்துறையில் இருக்கக்கூடிய அந்த தகவல்கள் மாறவே மாறாது. எனவே ஆக்கிரமிப்பு எப்பொழுது வேண்டுமானாலும் அகற்றப்படும் அதை நாம் கண்காணித்து வருகிறோம்''என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்