'காத்துக்கொண்டிருக்கும் உறவுகள்'... 'சசிகலா விடுதலை எப்போது?'... முக்கிய தகவலை வெளியிட்ட பெங்களூரு சிறை நிர்வாகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் விடுதலை குறித்து சிறை நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் 4 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்த நிலையில் அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. மேலும் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தைச் சமீபத்தில் பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார்.

இதனிடையே தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், சசிகலாவின் விடுதலை முக்கிய திருப்பமாக அமையும் என பார்க்கப்படுகிறது. மேலும் நன்னடத்தை அடிப்படையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனு, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட ஆலோசனையை சிறைத்துறை கேட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சசிகலா குறித்துக் கேட்ட சில கேள்விகளுக்கு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது. அதில் சசிகலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தைச் செலுத்திவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தங்களுக்குத் தகவல் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் தண்டனை கைதி, 9 ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் 60 வயதை அடைந்திருந்தால் அவர்களுக்குத் தண்டனையில் சலுகை வழங்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளதாகச் சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இதன்படி பார்க்கும்போது ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு விடுமுறை சலுகை கிடைக்காது என்று சிறை நிர்வாகம் சூசகமாகத் தெரிவித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா முன்பு 35 நாட்கள் சிறையிலிருந்தார்.

இந்த நாட்கள் அவரது தண்டனை காலத்திலிருந்து கழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் 2 முறை 17 நாட்கள் பரோலில் வீட்டுக்குச் சென்றார். இந்த 17 நாட்களும் தண்டனை காலத்தில் சேர்க்கப்படும். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி தான் சசிகலா விடுதலை ஆவார் என்பது உறுதி என்று கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்