'சித்ராவின் வாயாலையே சொல்ல வைத்த ஹேம்நாத்'... 'அந்த பொண்ணு இவ்வளவு டார்ச்சர் அனுபவிச்சு இருக்கா?'... போலீசார் மீட்டெடுத்த ஆடியோவில் தெரிய வந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத்தால் அழிக்கப்பட்ட ஆடியோ போலீசாரால் மீட்டெடுக்கப்பட்ட நிலையில், அதில் சித்ரா அனுபவித்த கொடுமைகள் தற்போது தெரியவந்துள்ளது.

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே இருவருக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இருவரும் ஒரு பிறந்தநாள் விழாவுக்குச் சென்றிருந்த நிலையில் அங்கு இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதன் பிறகு பதிவு திருமணமும் நடைபெற்றுள்ளது.

அதன் பின்னர் தான் ஹேம்நாத்தின் சந்தேக பார்வை சித்ரா மீது திரும்பியுள்ளது. சீரியலில் முல்லை, கதிர் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அதேநேரத்தில் சீரியலில் நெருக்கமான சில காட்சிகள் இருந்த நிலையில், சித்ராவைச் சந்தேக பார்வையுடனேயே பார்க்கத் தொடங்கிய ஹேம்நாத், பல கேள்விகளால் சித்ராவைத் துளைத்து எடுத்துள்ளார். மேலும் அது போன்று நெருக்கமான காட்சிகளில் தொடர்ந்து நடிக்கக் கூடாது என்று சித்ராவிடம் ஹேம்நாத் கூறி சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே நடன நிகழ்ச்சியில் முல்லை - கதிர் ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், அதனை பிரிக்கும் விதமாகக் குமரன் திருமணமானவர் அதனால் அவருடன் இனி தன்னால் ஆட முடியாது என்று சித்ராவின் வாயால் பலரது முன்னிலையில் சொல்ல வைத்து சீரியல் காதலை சீரியசாக பிரித்து வைத்துள்ளார் ஹேம்நாத். இது சீரியலை பாதிக்கக் கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட குழுவினர் மீண்டும் அவர்களை டிக்டாக் மூலம் சேர்ந்து வைத்துள்ளனர். அதன் பின்னர் சீரியலில் சில நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சித்ராவுக்கும் ஹேம் நாத்துக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின்னர் தான் சித்ராவின் சீரியல் வாழ்க்கையில் ஹேம்நாத் அதிகமாகத் தலையிட ஆரம்பித்துள்ளார். இந்த சூழ்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சித்ரா வீடு கட்ட வாங்கிய கடன், மற்றும் புதிதாக வாங்கிய ஆடி காருக்கு மாதம் தோறும் செலுத்த வேண்டிய கார் லோன் ஆகியவை சித்ராவுக்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

அந்த நேரத்தில் ஹேம்நாத் தொடர்ந்து கொடுத்து வந்த டார்ச்சர் எல்லை மீறிச் சென்றதால் கடும் மன உளைச்சலுக்கு சித்ரா ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்கக் கூடாது என சித்ராவிற்குத் தடை போடும் அளவிற்கு ஹேம்நாத் சென்றுள்ளார். இதையடுத்து மாமனார் ரவிச்சந்திரனிடம் செல்போனில் பேசிய சித்ரா, ஹேம்நாத் செய்யும் டார்ச்சர்கள் குறித்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். சித்ரா ஹேம்நாத்தின் தந்தையிடம், ஹேம்நாத் தன்னை சந்தேகப்பட்டுக் கொடுமைப்படுத்தும் விஷயத்தை செல்போனில் கூறி வந்துள்ளார்.

இந்த குரல் பதிவு சித்ராவின் செல்போனில் பதிவாகி இருந்த நிலையில் ஹேம்நாத் அதனை அழித்தது சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ரெகவரி சாப்ட்வேர் மூலம், அவர் பேசிய குரல் பதிவுகளை மீட்ட காவல்துறையினர் அந்த குரல் பதிவில் சித்ரா தனது மாமனாரிடம் தெரிவித்த புகார்களை ஆதாரமாகக் கொண்டு ஹேம்நாத்தை கைது செய்ததாகத் தெரிவித்தனர். இதனிடையே ஹேம்நாத் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

ஹேம்நாத் கொடுத்த தொல்லைகள் குறித்து அவருடன் பணியாற்றிய நண்பர்களிடம் சித்ரா தெரிவித்ததாகக் கூறப்படுவதால் தற்போது நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. அவர்களை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகச் சேர்ப்பதற்கு காவல்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன் மூலம் மனதளவில் சித்ரா அனுபவித்து வந்த டார்ச்சர்கள் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்