'மொத்த குடும்பத்துக்கும், ஒத்த மெழுகுவர்த்தியாய் ஒளி வீசிய நடிகை சித்ரா!'.. அணைந்தது எப்படி? விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. சித்ரா என்கிற சாதாரண பெண் தமிழக அளவில் அனைவரிடத்திலும் பரிச்சயமான ஒரு பிரபல சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்து குடும்பத்துக்காக மெழுகுவர்த்தியாக தன்னைத்தானே கரைத்துக் கொண்டு தன் வாழ்க்கையை தானே முடித்துக்கொண்டதாக போலீஸார் கருதுகின்றனர்.

சின்னத்திரை உலகில் சித்து என்று அழைக்கப்பட்டாலும் முல்லை என்றால் தான் சித்ராவை கிராமப்புறங்களில் உள்ளோருக்கு தெரியும். அந்த அளவுக்கு விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவை தங்களது குடும்பத்தில் ஒரு பெண்ணாகவே நேசித்தனர் சீரியல் பிரியர்கள். இப்படி சாதாரண பெண்ணாக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளினியாக சின்னத்திரைகளில் முகம் காட்டி பின்னர் மெல்ல மெல்ல தொலைக்காட்சி தொடரில் முறையாக மலர்ந்தார் இந்த முள் இல்லாத ரோஜா.

நடிக்க சென்ற சில நாட்களுக்குள்ளாகவே புகழின் உச்சிக்கு சென்ற சித்ராவுக்கு புகழுடன் சேர்ந்து வருமானமும் தழைக்கத் தொடங்கியது. தினமும் சுமார் 20 மணி நேரம் வரை சிரித்த முகத்துடன் தன் வேலையை விரும்பிச் செய்து வந்த சுறுசுறுப்பான நடிகைதான் சித்து என்கின்றனர். அவருடன் பணியாற்றிய சக நடிகர்-நடிகைகள் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சீரியலில் அவருக்கு சம்பளம் வழங்கப் பட்டதாக கூறும் நிலையில் விளம்பரங்கள், கல்லூரி மற்றும் கடை திறப்பு விழாக்கள் என இரவு பகல் பாராது தன்னுடைய நிகழ்ச்சிகளுக்காக உள்ளூர் மற்றும் திரைகடல் தாண்டியும் பல லட்சம் ரசிகர்களையும் சம்பாதித்து, பல லட்சங்களையும் சம்பாதித்திருக்கிறார் சித்ரா. அந்தவகையில் மிகக் குறுகிய ஒரு காலகட்டத்தில் 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சித்ரா சென்று வந்திருப்பது அவருடைய பாஸ்போர்ட்டிலிருந்து தெளிவாகிறது. என்னதான் புகழ்பெற்ற நடிகையாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடரும் ரசிகர்களின் பிறந்தநாளுக்கு கூட தானே நேராக சென்று வாழ்த்து கூறிய சம்பவங்களையும் சித்ரா அசாதாரணமாக செய்துள்ளார். இதனாலேயே ரசிகர்கள் சித்ராவிடம் மிகவும் பிரியமாக இருப்பதைக் காண முடிகிறது. 

ரசிகர்களை மட்டும் கவனித்தால் போதுமா? தன்னுடைய தாய் தந்தையரை கவனிக்கவும் சித்ரா ஒருபோதும்  தவறியதில்லை. தனக்கு முதன் முதலாக அறிமுகமான உதவி இயக்குனர் ஒருவருடன் நடந்த திருமணம் பாதியில் நின்ற போதிலும் தனது பெற்றோரின் அறுபதாவது திருமண நாளை தங்கள் பகுதி காவல்துறையினரை வரவழைத்து விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் சித்து. இப்படி பம்பரமாக சுற்றி சூறாவளி புன்னகையை சுழற்றி வீசிய சித்ரா, கை நிறைய பணம் சம்பாதித்தாலும் பார்ட்டி, விருந்து என்று எங்கேயும் சென்று பணத்தை வீணடிக்காமல் தனது பெற்றோருடன் தான் வசிக்க சொந்தமாக பங்களா ஒன்றை கட்டத் தொடங்கினார். அந்த இறுதிகட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆடி கார் ஒன்றையும் விலைக்கு வாங்கினார்.  இதனாலேயே அவருடைய மன நெருக்கடி அதிகரித்ததாகவும், வீடு கட்டுவது,  காருக்கான தவணை தொகையை செலுத்துவது என அவருடைய பணம் தேவை அதிகரித்த நிலையில் தான், சீரியல் தொடங்கி கலைநிகழ்ச்சிகள் வரை அனைத்தையும் கொரோனா முடக்கிப் போட்டது.

சேமித்த பணத்தை வைத்து தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர்கள் மூலம் நிலைமையை சமாளித்து வந்த சித்ரா ரியல் எஸ்டேட் புரோக்கர் என்று தனக்கு அறிமுகமான ஹேம்நாத்துடன் காதலில் விழுந்திருக்கிறார். தன்னுடைய சக நடிகர்களிடம் அவரை, தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திய சித்ராவுக்கு, ஹேம்நாத்துக்கு ஏராளமான பெண் தோழிகள் உண்டு, அவர் பப்பும் மப்புமாக சுற்றி பணத்தை விரையம் செய்யக் கூடியவர் என்று பலரும் எச்சரித்த்துள்ளனர். ஆனால், சித்ராவுக்கு, படப்பிடிப்புக்கு சென்றால் 4 மணி நேரம் வரை காருக்குள்ளேயே காத்திருக்கும் அளவுக்கு பொறுமைசாலியான ஹேம்நாத் மீது காதல் அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடக்க, பின்னர் திருமணத்துக்கு முன்பாக தனியாக இருவரும் காதல் சுற்றுலா சென்றனர். இதற்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஹேம்நாத் நடத்தையை சித்ராவின் தாய் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இரவு பகலாக மகள் சம்பாதிக்கும் பணம் ஹேம்நாத்துக்காக இந்த மாதிரியான வழிகளில் செலவழிக்கப்படுவதை சித்ராவின் தாய் விரும்பவில்லை என்று தெரிகிறது. கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

பிப்ரவரி மாதம் நடக்கவிருந்த திருமண ஏற்பாடுகளை நிறுத்துவதற்கு சித்ராவின் தாய் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சித்ராவின் வருமானம் தொடர்பாக அவருடைய தாய் கணக்கு கேட்டதாலும், ஹேம்நாத் குறித்த தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்ததாலும் மன உளைச்சலால் வீட்டிற்கு செல்வதை தவிர்த்த, சித்ரா ஈவிபி பிலிம்ஸ் சிட்டி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார். சம்பவத்தன்று படப்பிடிப்பு முடிந்து இரண்டு மணிக்கு ஹோட்டலுக்கு திரும்பிய நிலையில் தான் சரியான தூக்கமின்றி மன அழுத்தத்தில் இருந்த சித்ராவை விட்டுப் பிரிந்து விடுமாறு சித்ராவை, சித்ராவின் தாய் வலியுறுத்தி கடுமையாக போனில் பேசியிருக்கிறார்.

சித்ராவுக்கு ஏற்கனவே ஒரு முறை திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நின்று போன நிலையில் இரண்டாவது முறையும் தனது திருமணம் நின்று போனால் என்ன செய்வது என்கிற குழப்பமும் மன அழுத்தமும் அதிகரித்ததை அடுத்து சித்ரா இப்படியான முடிவை தேடிக் கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். மொத்தத்தில் மொத்த குடும்பத்துக்கும் மெழுகுவர்த்தியாய் இருந்த இந்த ஒத்த பெண், அவர்களுக்கு ஒளி கொடுத்துக்கொண்டிருந்த இந்த முல்லை என்கிற இந்த தீபம் இப்போது அணைந்துவிட்டது என்றும், இவையெல்லாம் தான் சித்ராவின் மரணத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று விசாரணை மூலம் கருதுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே சித்ராவின் வழக்கு சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக சென்னை கமிஷனர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்