"மறையாத வலியாக இருக்கும்".. சண்டை பயிற்சியாளர் மரணம்.. ‘விடுதலை’ பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட இரங்கல்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விடுதலை படத்தின் திரைப்பட படப்பிடிப்பு இடைவேளையின் போது சண்டை பயிற்சி கலைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படம் விடுதலை. நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

​​விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று சமீபத்தில் அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். இந்த விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை படத்தின் படப்பிடிப்பு சென்னை, வண்டலூர் பகுதியில் நடந்து வருகிறது. மேலும் இந்த படப்பிடிப்பில் ரயில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில், படத்தின் சண்டைப்பயிற்சி கலைஞர் சுரேஷ் குமார் என்பவர் பயிற்சி ஒத்திகையின் போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த சண்டைப் பயிற்சியாளரின் பெயர் சுரேஷ் குமார், இவர் 59 வயது நிரம்பியவர். படப்பிடிப்பு இடைவேளையில் மதியம் 2.15 மணியளவில்,  சண்டைக் காட்சிகளுக்கான வழக்கமான ஒத்திகையின் போது இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்துள்ளது. சுமார் 15 அடி உயரத்தில் சண்டை காட்சிக்கான ஒத்திகையில் ஈடுபடுவது இயல்பான ஒன்றே. எனினும் இந்த பயிற்சியில் ஈடுபட்ட போது, குறிப்பிட்ட பயிற்சி கலைஞர் சுரேஷ் குமார், கேபிள் அறுந்ததால் விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தின் போது இயக்குநர் வெற்றிமாறன் உட்பட, இயக்குநர் குழுவினர் சம்பவ இடத்தில் இல்லை. ஆம், அனைவரும் உணவு இடைவேளைக்கு சென்ற போது சண்டைப் பயிற்சியாளர்கள் குழு மட்டும் ஒத்திகையில் இருந்தபோது இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. படத்தின் நாயகன் நடிகர் சூரியும் இச்சம்பவத்தின் போது கேரவனில் உணவருந்த சென்றிருந்தார்.

ஏற்கனவே பிரத்யேகமாக நமக்கு இந்த தகவல் கிடைத்திருந்த நிலையில், தற்போது சண்டைப்பயிற்சி கலைஞர் மரணம் குறித்து விடுதலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "விடுதலை படத்தின் ஆக்‌ஷன் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி எங்கள் அன்புக்குரிய சண்டைப் பயிற்சி கலைஞர் என்.சுரேஷ் காலமானார் என்பதை தெரிவித்துக் கொள்வது எங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் துயரத்தையும் தருகிறது. எங்களின் முழுமையான பாதுகாப்பு மற்றும் காத்திருப்பு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்த போதிலும், அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.

இது எங்கள் முழு அணிக்கும் ஒரு பெரிய இழப்பு, இது எங்கள் இதயங்களிலும் நினைவுகளிலும் மறையாத வலியாக இருக்கும். என்.சுரேஷ் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

படக்குழுவினரை எப்போதும் கவனமாக இருக்கும் படி, இயக்குனர் வெற்றிமாறன் அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். அப்படி ஒரு சூழலில், கவனத்தையும் தாண்டி எதிர்பாராத ஒரு துயர சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIDUTHALAI, STUNT MAN, VETRIMAARAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்