‘தாய் வீட்டுக்கு விருந்துக்குப் போன புதுமணதம்பதி’.. ‘நீண்ட நேரமாக பூட்டியிருந்த கதவு’.. திருமணம் ஆன 3 நாளில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆற்காடு அருகே திருமணமான 3 நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் திவ்யா (21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த ராகவேந்திரன் (27) என்பவருடன் திவ்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவர் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி திவ்யா கணவர் ராகவேந்திரனுடன் தனது தாய் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார். அங்கு மதிய உணவு சாப்பிடும்போது திவ்யா சரியாக சாப்பிடமால் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உடல்நிலை சரியில்லை எனக்கூறி வீட்டின் அறை ஒன்றில் திவ்யா ஓய்வெடுக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அறையைவிட்டு திவ்யா வெளியே வராததால் உறவினர்கள் அறை கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் திவ்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 3 நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

SUICIDEATTEMPT, CRIME, POLICE, COLLEGESTUDENT, VELLORE, MARRIAGE, BRIDE, DIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்