'பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்'... 'சிறையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விடுதலை'... சசிகலாவின் வழக்கறிஞர் முக்கிய தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா காலமானதால் மற்ற மூவருக்கும் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அங்குள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். இதனிடையே அவருடைய தண்டனை காலம் முடியும் நேரம் நெருங்கி வந்த நிலையில், அவர் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக வரும் ஜனவரி 27-ந் தேதி சசிகலா விடுவிக்கப்படுவார் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறை தெரிவித்திருந்தது.

மேலும் சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராத தொகையும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செலுத்தப்பட்டு விட்டது. இதையடுத்து அவரை சிறையிலிருந்து விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விற்கு அளித்து பேட்டியில், ''சசிகலா ஜனவரி 27-ந் தேதி விடுவிக்கப்படுவார் என்று ஏற்கெனவே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி, பார்த்தால் இன்னும் 68 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருக்க வேண்டியது உள்ளது. சசிகலாவிற்கு நன்னடத்தை விதிகளின் கீழ் 129 நாட்கள் சலுகை உள்ளது. எவ்வாறெனில் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையைப் பெற முடியும். எனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்குத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் எப்போது வேண்டுமானாலும் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம்” எனக் கூறினார்.

இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சசிகலாவின் விடுதலை முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகு அவரது அரசியல் நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே சசிகலாவின் விடுதலை தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்