'நீங்க கதவை தட்டுவீங்கன்னு இன்னைக்கு வர காத்துட்டு இருக்கேன்'... 'தட்டுவீர்களா'?... நெஞ்சை கலங்க வைக்கும் உமா சேதுராமனின் பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் சேதுராமன் மறைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், அவர் குறித்து அவரது மனைவி உமா சேதுராமன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

கடந்த வருடம் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு எப்படி மறக்க முடியாதோ அது போன்று, சேதுராமனின் மறைவையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். தோல் மருத்துவரான சேதுராமன், இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

அன்றாட வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொள்வது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி என மருத்துவம் சார்ந்த பல விஷயங்கள் குறித்து அவர் பேசுவது வழக்கம். இதன் காரணமாகவே பலர் இன்ஸ்டாகிராமில் சேதுராமனைப் பின்தொடர்ந்து வந்தனர். கடந்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி சென்னையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

அவருடைய மறைவு திரையுலகில் மட்டுமல்லாது, பொதுமக்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்போதும் பாசிட்டிவாக பேசும் ஒருவரின் திடீர் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவருடைய மனைவி உமையாள் என்கிற உமா. இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.

சேதுராமன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அவரது மனைவி உமையாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் குறித்து உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். அதில்,

'மா' இப்படித்தான் நான் உங்களை என்றுமே அன்போடு அழைத்திருக்கிறேன். உங்கள் பெயரை வைத்து இதுவரை அழைத்ததே இல்லை. அது ஏனென்றால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் உங்கள் மீது அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன்.

எனது தினசரி வாழ்க்கை உங்களைச் சுற்றி, உங்களை மட்டுமே சுற்றி இருந்தது. உங்கள் சந்திப்புகளை/ பயணங்களை/ தினசரி நோயாளிகள் பட்டியலை/ உடற்பயிற்சி நேரத்தை/ உணவை/ ஓய்வைத் திட்டமிடுவேன்.

4 வருடங்களில் உங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டுமே நினைத்திருக்கிறேன். அதைச் சாத்தியப்படுத்த என்னால் முடிந்த வகையில் சின்னசின்ன வழிகளில் உதவியிருக்கிறேன்.

நீங்கள் கனவு காண்பதை நிறுத்தியதே இல்லை. உங்கள் கனவுகளை நனவாக்கச் சாத்தியப்படும்போது நான் வேண்டாம் என்று சொன்னதே இல்லை.

உங்களுக்குக் கிடைக்க அரிதான ஒரு உதவியாளர் நான், அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் என்று பல முறை சிறுபிள்ளைத்தனமாக நாம் பேசியிருக்கிறோம். பணம் என்றுமே உங்களுக்கு முக்கியமாக இருந்ததில்லை. மகிழ்ச்சியும் அன்பு மட்டுமே முக்கியம்.

உங்களுக்கு நெருக்கமானவர்கள் வருத்தமாக இருந்தால் உங்களால் உறங்க முடியாது. அதிகம் சிந்திக்கும், ஆர்வம் கொண்ட, ஆத்மார்த்தமான, குழந்தைத்தனமான, அப்பாவியான, முதிர்ந்த ஆன்மா நீங்கள். உங்களையும் உங்கள் குணங்களையும் யாராலும் பிரதி எடுக்க முடியாது.

ஒரு வருடம் அதற்குள் முடிந்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் கதவைத் தட்டுவீர்கள் என்று இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். தட்டுவீர்களா?

வேதாந்தும், சஹானாவும் வளர்ந்து கதவைத் தட்டும் வரை நான் காத்திருப்பேன். நீங்கள் தூரமாக இல்லை. எங்களால் கேட்க, பார்க்க முடியாத அளவு நெருக்கமாக இருக்கிறீர்கள்.

அன்புடன்

உமா சேதுராமன்"

என நெகிழ்ச்சியாகத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்