‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களால் கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுத முடியாத சூழல் நிலவியது. இதனால் தமிழகத்தில் அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில், அரியர் தேர்வுகளுக்கு பணம் கட்டிய அத்தனை மாணவர்களும் ஆல் பாஸ் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் அரியர் தேர்வு எழுத இருந்த மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆனால், அரசின் இந்த முடிவை எதிர்த்து, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) பதிலளிக்க  உத்தரவிட்டிருந்தது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த AICTE, அரியர் தேர்வுகளை ரத்து செய்வது விதிகளுக்கு எதிரானது என்று தெரிவித்தது. UGC-க்கு இந்த மனுவில் பதில் அளிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு வழக்கு வரும் 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், UGC தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், பல்கலைக்கழகத்தின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்றும், தேர்வுகளை கட்டாயமாக எழுதியே ஆக வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான வழக்கின் விசாரணை நாளை மறுதினம் வரவுள்ளதால் அதோடு சேர்த்து விசாரிக்கும் விதமாக நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்