'சொத்தை வித்தாலும் 20 லட்சம் வராதே'... 'கதறிய குடும்பம்'... 'எஸ்பிக்கு பறந்த தகவல்'... ஒரே வார்த்தையில் நெகிழ வைத்த உதயநிதி ஸ்டாலின்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உதயநிதி ஸ்டாலினின் மனித நேயத்தைக் காவல் துறையில் பணியாற்றி வரும் போலீசார் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் புஷ்பராஜ். இவர் திருவள்ளூர் மாவட்ட காவலர் குடியிருப்பில் தனது மனைவி எழிலரசி மற்றும் ஒரு வயது மகன் ஜெயசந்திரனுடன் வசித்து வருகிறார். தற்போது பொது முடக்கம் அமலில் இருப்பதால், அவருக்கு திருவாலங்காடு சந்திப்பில் பணி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பணியிலிருந்த புஷ்பராஜூக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குப் பரிசோதனை செய்ததில் தலைமைக் காவலர் புஷ்பராஜூக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருப்பதை உறுதிப்படுத்தினர். அதைக் கேட்டு தலைமைக் காவலர் மற்றும் அவரது மனைவி எழிலரசி, குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையே தலைமைக் காவலர் புஷ்பராஜூக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருக்கும் செய்தி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் கவனத்துக்குச் சென்றது. உடனே மருத்துவமனைக்குச் சென்ற வருண் குமார், தலைமைக் காவலரைச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் அவரது உடல்நிலையின் தீவிரம் குறித்து உணர்ந்த வருண் குமார், தலைமைக் காவலரை மீட்டு சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்குத் தலைமைக் காவலரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தலைமைக் காவலரின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதற்கு 20 லட்சம் வரை செலவாகும் எனத் தெரிவித்தனர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் புஷ்பராஜ் அவ்வளவு பணத்திற்குத் தனது  சொத்தை விற்றால் கூட ஏற்பாடு செய்ய முடியாதே என மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனே தலைமைக் காவலரின் நிலைமையைக் கருத்தில் கொண்டு கருப்பு பூஞ்சைக்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.

பின்னர் முதல் கட்டமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தலைமைக் காவலர் புஸ்பராஜ்,  மருத்துவர்கள் ஆலோசனைப்படி ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை சிறப்புச் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார். அங்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் புஷ்ப ராஜைச் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் தலைமைக் காவலரிடம்  ‘நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களுக்கான அனைத்து  செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். விரைவில் நீங்கள் குணமடைந்த மீண்டும் பணிக்குத் திரும்புவீர்கள்’ என்று கூறினார். அதைக் கேட்ட தலைமைக் காவலர் மனம் நெகிழ்ந்து உருகிப் போனார்.

தலைமைக் காவலரின் நிலை அறிந்து துரித நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் மற்றும் தலைமைக் காவலரின் சிகிச்சை செலவை ஏற்றுக்கொண்டதோடு, அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின் மனித நேயத்தையும் காவல்துறையில் உள்ள பலரும் நெகிழ்ந்து பாராட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்