‘நான் பேசுன ரெண்டு வரியை வச்சு மட்டுமே புகார் கொடுத்திருக்காங்க’!.. தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு ‘உதயநிதி’ கொடுத்த விளக்கம் என்ன..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேர்தல் ஆணையம் அளித்த நோட்டிஸுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மரணங்கள் பற்றி தேர்தல் பரப்புரையில் பேசியது குறித்து இன்று (07.04.2021) மாலை 5 மணிகுள் விளக்கமளிக்கும்படி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

கடந்த மாதம் 31-ம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் இருவரும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் உயிரிழந்ததாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில், இது தனிமனித விமர்சனம் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தன்னுடைய பேச்சு குறித்து இன்று மாலைக்குள் விளக்கமளிக்கும்படி உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அவ்வாறு விளக்கம் அளிக்க தவறினால், அவரை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டிஸுக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘கடந்த மார்ச் 31-ம் தேதி தாராபுரத்தில் தான் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். இதனை என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை’ என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்